பழநி கோயில் நில மோசடி விவகாரம்: சிபிசிஐடி டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் அதிரடி விசாரணை தொடக்கம்!
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை, வெறும் ரூ.2 கோடிக்கு போலி ஆவணங்கள் மூலம் மோசடியாகப் பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில், திண்டுக்கல் சிபிசிஐடி டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் அமைக்கப்பட்ட புதிய விசாரணைக்குழு தனது பணிகளை இன்று (வியாழக்கிழமை) அதிரடியாகத் தொடங்கியுள்ளது. பழநி அடிவாரம் சந்நிதி வீதியில் அமைந்துள்ள தண்டயுதபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான இந்த நில மோசடியில், உயர்மட்ட அரசியல் நிர்பந்தங்களும் முக்கியப் பிரமுகர்களும் பின்னணியில் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
அதிகாரிகள் சஸ்பெண்ட் மற்றும் ஆவணங்கள் ஒப்படைப்பு:
இந்த இமாலய நில மோசடி வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்து கொடுத்த சார்-பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் மாவட்டப் பதிவாளர் சசிகலா ஆகியோர் ஏற்கனவே பணியிடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளனர். மேலும், சார்-பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் போலி டிரஸ்ட் பிரமுகரான முருகதாஸ் உள்ளிட்ட 4 பேர் மீது கூட்டுச்சதி, ஆள்மாறாட்டம், மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் பழநி அடிவாரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (FIR) உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் அனைத்தும் திண்டுக்கல்லில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் டிஎஸ்பி அஜய் தங்கத்திடம் இன்று முறைப்படி ஒப்படைக்கப்பட்டன.
மூன்று மாவட்ட போலீசாருடன் களமிறங்கும் சிபிசிஐடி:
திண்டுக்கல் மாவட்ட சிபிசிஐடி பிரிவில் போதிய பணியாளர்கள் இல்லாததால், இந்த மெகா மோசடி வழக்கை மிக விரைவாக விசாரித்து முடிக்க ஏதுவாக மதுரை, தேனி மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து 5 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 15-க்கும் மேற்பட்ட போலீஸார் திண்டுக்கல்லுக்கு அவசரமாக வரவழைக்கப்பட்டுள்ளனர். டிஎஸ்பி அஜய் தங்கம் முன்னிலையில் ஆஜரான இந்த அதிகாரிகள் அடங்கிய குழுவினர், முதற்கட்டமாகத் திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் கோப்புகளை ஆய்வு செய்து புதிய விசாரணை ஆவணங்களைத் தயாரிக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளனர். அடுத்தகட்டமாக இக்குழுவினர் தனித்தனியாகப் பிரிந்து, பழநிக்கு நேரில் சென்று தங்களது விரிவான கள விசாரணையை மேற்கொள்ளவுள்ளனர்.

AthibAn Tv