“நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் கொடூரக் கொலை!”: தலையைத் துண்டித்துச் சாலையில் வீசிய கும்பல் - பழிக்குப்பழியாக 6 பேர் பலியான சோகம்!
நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே 15 ஆண்டுகால முன்விரோதம் காரணமாகத் தந்தை மற்றும் அவரது 5 வயது மகன் ஆகிய இருவரும் கொடூரமான முறையில் பழிக்குப்பழியாகக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்லிடைக்குறிச்சி காவல் எல்லைக்கு உட்பட்ட மூலச்சி வடக்குத் தெருவைச் சேர்ந்த விவசாயி காளிமுத்து (40) என்பவரது தரப்பிற்கும், அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள் பாண்டியன் தரப்பிற்கும் இடையே கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பெண்களுக்குள் ஏற்பட்ட சாதாரணத் தண்ணீர்ப் பிரச்சினையால் முன்விரோதம் வெடித்தது. இந்தத் தொடர் பகையின் காரணமாக, கடந்த காலங்களில் இருதரப்பிலும் மாறி மாறி அடுத்தடுத்து 6 கொலைகள் அரங்கேறியுள்ள நிலையில், தற்போது இந்த இரட்டைக் கொலைச் சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
நேற்று மாலை காளிமுத்து தனது மகன்கள் சின்னத்துரை (15), ஜெயராஜ் (5) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் மருதுடையார்குளம் பகுதியிலிருந்து மூலச்சிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆயுதங்களுடன் ஒரு கார் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து வந்த 9 பேர் கொண்ட கும்பல், காளிமுத்துவின் த்வ சக்கர வாகனம் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்தியது. இதில் நிலைகுலைந்து கீழே விழுந்தவர்களில் 5 வயது சிறுவன் ஜெயராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். காளிமுத்துவும் அவரது மூத்த மகன் சின்னத்துரையும் காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த போது, அக்கும்பல் காளிமுத்துவை அரிவாளால் சரமாரியாக வெட்டிச் சாய்த்ததுடன், அவரது தலையைத் துண்டித்துச் சாக்குப்பையில் எடுத்துச் சென்று 5 கி.மீ தொலைவிலுள்ள நெடுஞ்சாலையில் வீசிவிட்டுத் தப்பியோடியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வீரவநல்லூர் மற்றும் கல்லிடைக்குறிச்சி போலீஸார், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சிறுவன் சின்னத்துரையை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த காளிமுத்து மற்றும் சிறுவன் ஜெயராஜின் உடல்களைப் பிரேதப் பரிசோதனைக்காகக் கைப்பற்றினர். நெல்லை சரக டிஐஜி திருநாவுக்கரசு மற்றும் மாவட்ட எஸ்பி விஷ்வேஷ் பா.சாஸ்திரி ஆகியோர் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்ததில், பெருமாள் பாண்டியன் தரப்பினரே இப்பழிக்குப்பழி கொலையைச் செய்துள்ளனர் என்பது முதற்கட்ட விசாரணையில் உறுதியானது. தப்பியோடிய 9 பேர் கொண்ட கொலையாளி கும்பலைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், மூலச்சி கிராமத்தில் அசம்பாவிதங்களைத் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



AthibAn Tv