"முதல்வர் விஜய் தொகுதியிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா?" - வானதி சீனிவாசன் கேள்வி!
சென்னை பெரம்பூரில் இளம்பெண் ஒருவர், தனது முன்னாள் ஆண் நண்பர் மற்றும் 4 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதமும் இதேபோன்று பெரம்பூர் பகுதியில் இளம்பெண் ஒருவர் வீடு புகுந்து தாக்கப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி, பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது 'எக்ஸ்' (X) சமூக ஊடகப் பக்கத்தில் தமிழக அரசை கடுமையாக விமர்சித்துப் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "மேடைகள் தோறும் பெண்களை அக்கா, தங்கை, தோழி என உணர்வுப்பூர்வமாகப் பேசும் முதல்வரின் சொந்தத் தொகுதியிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், தமிழகப் பெண்களுக்கு முதல்வர் எப்படி பாதுகாப்புத் தரப் போகிறார் என்ற கேள்வி ஒவ்வொரு பெண்ணின் மனதிலும் எழுந்துள்ளது" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், பெண்களின் பாதுகாப்பிற்காகத் தொடங்கப்பட்ட சிறப்புப் படையின் செயல்பாடு குறித்து விமர்சித்த அவர், "சீரும் சிங்கங்களாய் ஏதோ பெரிய மாற்றம் கொண்டு வரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்புடன் துவங்கப்பட்ட 'சிங்கப் பெண் அதிரடிப் படை', தற்போது சோர்ந்து வழக்கம்போல் சாதாரண மகளிர் காவல் நிலையங்களாகச் செயல்படுகிறது. அப்படியென்றால் எதற்கு இந்தத் தனி சிறப்புப்படை?" என்று சாடியுள்ளார். எனவே, காதல் என்ற பெயரில் அத்துமீறும் ஆண்களிடமிருந்து பெண்களைக் காக்க, சிங்கப் பெண் படையை முடுக்கிவிட்டு அரசு இரும்புக்கரம் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

AthibAn Tv