கோயில் நிதியைத் திருடி கட்சிகளை உடைக்கும் பாஜக: உத்தவ் தாக்கரே கடுமையான குற்றச்சாட்டு!
மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களைப் பணம் கொடுத்து விலைக்கு வாங்கி, கட்சிகளை உடைக்கும் பாஜகவின் செயல்பாடுகளை அவர் கடுமையாகச் சாடினார். மக்கள் பிரதிநிதிகளை விலைக்கு வாங்கும் இத்தகைய நடவடிக்கைகளைப் பாஜகவினர் 'ஆபரேஷன் கமுலா' (Operation Kamala) என்று அழைத்து வரும் நிலையில், தற்போது பாஜக நடத்துவது ‘ஆபரேஷன் ராம் மந்திர்’ தானா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அயோத்தி ராமர் கோயிலில் நிதித் திருட்டு நடந்துள்ளதற்கான வலுவான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாகக் குறிப்பிட்ட உத்தவ் தாக்கரே, அங்கிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பெரும் பணம் தான் பிற அரசியல் கட்சிகளை உடைப்பதற்குப் பயன்படுத்தப்படுவதாகப் பொதுமக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது என்று குற்றம் சாட்டினார். மேலும், ஆன்மீகத் திருத்தலங்களிலும், கோயில்களிலும் இதுபோன்று முறைகேடுகளில் ஈடுபட்டுப் பணத்தைக் கொள்ளையடிப்பவர்களை இந்துக்கள் இனி ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்றும் அவர் தனது பேட்டியில் ஆவேசமாகத் தெரிவித்தார்.

AthibAn Tv