விராலிமலை தொகுதி காலி என்ற பேரவைத் தலைவரின் அறிவிப்புக்கு எதிராக அதிமுக கொறடா நீதிமன்றத்தில் வழக்கு!
சென்னை: கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டுத் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தார். அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட சட்டப்பேரவைத் தலைவர், விராலிமலை தொகுதி காலியாக இருப்பதாக அறிவித்தார். பேரவைத் தலைவரின் இந்த அறிவிப்பை ரத்து செய்யக்கோரி, அதிமுக கொறடாவான அக்ரி கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார்.
அதிமுக கொறடா தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், "சி.விஜயபாஸ்கர் மீது கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக்கோரி அதிமுக சார்பில் ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ள கோரிக்கை மனு பேரவைத் தலைவரிடம் நிலுவையில் உள்ளது. இத்தகைய சூழலில், அந்த மனு மீது முடிவெடுக்காமல் அவரது ராஜினாமாவை பேரவைத் தலைவர் அவசர அவசரமாக ஏற்றுக் கொண்டது சட்டவிரோதமானது" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பேரவைத் தலைவரின் இந்த முடிவு அரசியல் சாசன விதிகளுக்கும், இயற்கை நீதிக்கும் புறம்பானது என்று மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கில் நீதிமன்றம் இறுதி முடிவெடுக்கும் வரை, விராலிமலை தொகுதி காலியாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ள விவகாரத்தில் தேர்தல் ஆணையமோ அல்லது அரசோ மேற்கொண்டு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

AthibAn Tv