அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு: ஆர்.எஸ்.பாரதி அதிரடிப் பேட்டி
கரூர் சம்பவத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் பொறுப்பற்ற மற்றும் மரியாதையற்ற பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி, திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், கரூரில் நடந்த கூட்ட நெரிசல் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆற்றிய உரை தவறான, தீய நோக்கம் கொண்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த பேச்சு திமுக, அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக காவல் துறைக்கு எதிராகப் பொய்யான பிம்பத்தை உருவாக்குவதோடு, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நடக்கும் விசாரணையைத் திசைதிருப்ப முயல்கிறது என்றும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, “கரூர் சம்பவத்தில் ஆதவ் அர்ஜுனாதான் முக்கிய குற்றவாளி (Main Accused). அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இருவரை ஆளும் கட்சியில் இணைக்கும் விழாவில், தமிழ்நாட்டு மக்களுக்கு ஆத்திரம் ஏற்படும் வகையில் அவர் பேசியுள்ளார். கரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரவுள்ளதால், மக்களின் கவனத்தை திசை திருப்பவே அவர் இவ்வாறு பொய்யும் புரட்டுமாகப் பேசியுள்ளார். கரூர் சம்பவத்தின்போது மக்களின் உயிரைக் காப்பாற்ற ஸ்டாலின் உடனடியாக எடுத்த நடவடிக்கைகளை அரசியல் தெரிந்த அனைவரும் பாராட்டினர். அவர் யாரைப் போலவும் முகத்தை மூடிக்கொண்டு ஓடி ஒளியவில்லை” என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், “திமுக ஆட்சியில் இந்த வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட எஸ்ஐடி குழுவின் விசாரணை நடுநிலையாக நடைபெற்றது. இவர்களே சிபிஐ விசாரணை கேட்டதால் தற்போது அதுவும் நடந்து வருகிறது. ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையிலான இந்த விசாரணைக்கு விஜய் உள்ளிட்டோர் ஆஜராகி வந்துள்ளனர். புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், ஜெகதீஷ் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் ஏ1, ஏ2 என குற்றவாளிப் பட்டியலில் உள்ளனர். உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் சிபிஐ விசாரிக்கும் ஒரு வழக்கை பற்றி, அதில் குற்றவாளியாக இருக்கும் ஒருவரே விசாரணையை கெடுக்கும் வகையில் பேசியுள்ளார். எனவே, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும். நாட்டையே திவாலாக்கும் லாட்டரி குடும்ப பின்னணி கொண்ட இவர்களின் குற்றச்சாட்டுகளுக்குச் சட்டப்படி உரிய பதில் அளிப்போம்” என்று ஆர்.எஸ்.பாரதி விரிவாக விளக்கமளித்தார்.


AthibAn Tv