ரூ.52,000 கோடி மதிப்பிலான ராணுவத் தளவாடங்கள் வாங்க பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல்!
புதுடெல்லி: இந்திய முப்படைகளின் பலத்தையும், கண்காணிப்புத் திறனையும் மேலும் வலுப்படுத்தும் நோக்கில், சுமார் 52,000 கோடி ரூபாய் மதிப்பிலான நவீன ராணுவத் தளவாடங்களை வாங்குவதற்குப் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் (DAC) முதற்கட்ட ஒப்புதலை அளித்துள்ளது. பொதுவாக, முப்படைகளும் தங்களுக்குத் தேவையான நவீன ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் குறித்த விருப்பப் பட்டியலைப் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலிடம் சமர்ப்பிக்கும். அதற்கு இக்கவுன்சில் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, இறுதி ஒப்புதல் பெறப்பட்டுத் தளவாடங்களை வாங்குவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படும்.
இம்முறை தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்படைகளின் தேவைகளைக் கருத்தில் கொண்டு இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, தரைப்படை பயன்பாட்டிற்காகப் பகைநாட்டு ட்ரோன்களைத் தாக்கி அழிக்கும் 'ஆகாஷ் தரங்' என்ற அதிநவீன ஆயுதம், எதிரிகளின் டேங்குகளைத் தகர்க்கும் இலகு ரக ஏவுகணைகள் மற்றும் தரையிலிருந்து வான் இலக்கைத் தாக்கும் நடுத்தர ரக ஏவுகணைகள் வாங்கப்படவுள்ளன. மேலும், குறுகிய தூர வான் பாதுகாப்பு ஆயுதங்கள், டேங்குகளைப் பாதுகாக்கும் சிறப்பு கருவிகள் மற்றும் இலக்குகளைத் தேடிச் சென்று வெடிக்கும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய 'காமிகாஸ்' (Kamikaze) ட்ரோன்களும் இதில் அடங்கும்.
அதேபோல், கடற்படையின் பயன்பாட்டிற்காகக் கடல்சார் கண்ணிவெடிகள், போர்க்கப்பல்களில் இருந்து இயங்கக்கூடிய ட்ரோன்கள் மற்றும் எலக்ட்ரிக் உந்துவிசை கருவிகளுக்கான அதிநவீன பரிசோதனை மையம் ஆகியவற்றை அமைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய வான்வெளியைக் கண்காணிக்கும் திறனை மேம்படுத்தும் வகையில், விமானப்படை பயன்பாட்டிற்காக 'எப்டபிள்யூ-எச்ஏபிஎஸ்' (FW-HAPS) என்ற அதிநவீன கண்காணிப்பு கருவியும் வாங்கப்படவுள்ளது. முப்படைகளையும் நவீனமயமாக்கும் இந்த முக்கியத் திட்டம் நாட்டின் பாதுகாப்புப் பிரிவில் பெரும் மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

AthibAn Tv