தெலங்கானாவில் ‘புஷ்பா’ பட பாணியில் கடத்தல்: ரூ.2.62 கோடி மதிப்பிலான கஞ்சாவுடன் கண்டெய்னர் லாரி பறிமுதல்!
பத்ராத்ரி கொத்தகூடம்: தெலங்கானா மாநிலத்தில் ‘புஷ்பா’ திரைப்பட பாணியில் ரகசிய அறை அமைத்து கடத்த முயன்ற, சுமார் 2.62 கோடி ரூபாய் மதிப்பிலான 525 கிலோ கஞ்சாவை போலீஸார் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டம், சாரபாக்கா என்ற இடத்தில் 'ஈகல்' அதிரடிப்படையினரும் உள்ளூர் போலீஸாரும் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கண்டெய்னர் லாரியை நிறுத்திச் சோதனையிட்டபோது, லாரியின் உள்ளே இரண்டு அடுக்கு இரும்புத்திரை (False partition) அமைக்கப்பட்டு, அதற்குள் கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர்.
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், இந்த பிரம்மாண்ட கஞ்சா கடத்தலின் பின்னணியில் உள்ள அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த சஹதேவ் பாண்டில் என்பவர், அங்குள்ள அல்லூரி கோட்டை வனப்பகுதியில் கூலி ஆட்களை வைத்து சட்டவிரோதமாகக் கஞ்சாவைச் சேகரித்துள்ளார். பின்னர் அங்கிருந்து ஆந்திர மாநிலம் துலசி பாக்காவுக்குக் கொண்டு வரப்பட்ட கஞ்சா, இந்த கண்டெய்னர் லாரி மூலம் பத்ராசலம், கம்மம், வாரங்கல், ஆதிலாபாத் வழியாக உத்தர பிரதேச மாநிலத்திற்குக் கடத்த திட்டமிடப்பட்டிருந்தது தெரியவந்தது. ஆனால், கொத்தகூடம் போலீஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலால் இந்த கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிரடி சோதனையின் போது 525 கிலோ கஞ்சா மற்றும் கண்டெய்னர் லாரி ஆகியவற்றுடன், கடத்தலுக்குப் பாதுகாப்பாக (Escort) முன்னால் சென்ற ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் 5 செல்போன்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒடிஷாவைச் சேர்ந்த சஹதேவ் பாண்டில், ஆந்திராவைச் சேர்ந்த திரிநாத், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் குல்தீப் ஷர்மா மற்றும் ஒரு சிறுவன் ஆகியோரைப் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள சில குற்றவாளிகளையும் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


AthibAn Tv