சென்னையில் அதிரடி: 108 கிலோ குட்கா பறிமுதல் – கடத்தலில் ஈடுபட்ட 4 வியாபாரிகள் அதிரடி கைது!
சென்னை / ஆயிரம் விளக்கு: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்த 4 வியாபாரிகளைச் சென்னை மாநகரப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். சென்னையில் சட்டவிரோதப் புகையிலைப் பொருட்கள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கவும், இதில் ஈடுபடும் குட்கா வியாபாரிகளைக் கைது செய்து சிறையில் அடைக்கவும் சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவின் பேரில், மாநகரின் பல்வேறு பகுதிகளில் போலீசார் தங்களது தீவிரக் கண்காணிப்பு மற்றும் சோதனைப் பணியை முடுக்கிவிட்டனர்.
இதன் தொடர்ச்சியாக, ஆயிரம் விளக்கு பகுதிக்கு உட்பட்ட குலாம் அப்பாஸ் அலிகான் 7-வது குறுக்குத் தெருவில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் ரகசியத் தகவலின் பேரில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அங்குப் பெருமளவில் குட்கா பாக்கெட்டுகளைப் பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்த முகமது அனஸ் (29) என்பவரை போலீசார் கையும் களவுமாகக் கைது செய்தனர். அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 83 கிலோ எடையுள்ள குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல், கோடம்பாக்கம் யுனைடெட் இந்தியா காலனி பகுதியில் ஆட்டோ ஒன்றின் மூலம் குட்கா கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்ட ஒரு கும்பலை போலீசார் மடக்கிப் பிடித்தனர். இதில் சைதாப்பேட்டை வானியர் தெருவைச் சேர்ந்த பாரதிதாசன் (59), காரணி தோட்டத்தைச் சேர்ந்த மணி (48) மற்றும் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் (34) ஆகிய 3 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆட்டோவுடன், அவர்களிடமிருந்து 25 கிலோ குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை முழுவதும் நடத்தப்பட்ட இந்த இரு வேறு சோதனைகளில் மொத்தம் 108 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட 4 பேரும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

AthibAn Tv