“இந்தியாவின் எழுச்சி நிகழ்ந்துவிட்டது, உலக அரங்கில் முக்கிய இடம்”: அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் பெருமிதம்!
புதுடெல்லி: "இந்தியாவின் எழுச்சி சர்வதேச அளவில் ஏற்கனவே நிகழ்ந்துவிட்டது; உலக அரங்கில் இந்தியா தனக்கான முக்கிய இடத்தைப் பிடித்துள்ளதை நாங்கள் முழுமையாக அங்கீகரிக்கிறோம்" என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் மிக உயரிய பாராட்டைத் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள சுழலில், டெல்லியில் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மற்றும் வர்த்தகக் கூட்டணி குறித்துப் பல்வேறு முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் பேசுகையில், "இந்தியாவுடன் மற்றொரு பிரம்மாண்டமான புதிய ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் நிலைக்கு மிக அருகில் அமெரிக்கா வந்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ய நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். இந்தியாவுடன் ஒரு வலுவான கூட்டாளியாக இணைந்து செயல்படவே அமெரிக்கா விரும்புகிறது. சில வாரங்களுக்கு முன்பு புது டெல்லியில் இந்திய மத்திய அமைச்சர் ஒருவருடன் நான் உரையாடியபோது, 'இன்னும் 50 ஆண்டுகள் கடந்தாலும் நம் இரு நாடுகளும் மிகச்சிறந்த நண்பர்களாகவே நீடிக்கும்' என்று அவர் குறிப்பிட்டார். அமெரிக்கா உலகின் பழமையான ஜனநாயகம், இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயகம். ஜனநாயகம் என்று வரும்போது, வலுவான எதிர்க்கட்சிகளின் செயல்பாடு உள்ளிட்ட ஒரே மாதிரியான உன்னதக் கொள்கைகளை நாம் இரு நாடுகளும் கொண்டுள்ளோம்; இது உலகிலுள்ள எல்லா நாடுகளிலும் இருப்பதில்லை. இந்த பொதுவான ஜனநாயகக் கோட்பாடுகளே நம்மைத் தொடர்ந்து தடையின்றி இணைத்து வைத்திருக்கும்" என்று பெருமிதத்துடன் கூறினார்.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையே எதிர்காலத்தில் உள்ள பிரகாசமான வாய்ப்புகள் குறித்துப் பேசிய அவர், செயற்கை நுண்ணறிவு (AI), அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் விமானப் போக்குவரத்து உள்ளிட்ட எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும், இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான அசாத்திய ஆற்றல் நம்மிடம் உள்ளது என்றார். இதை முதன்மை அடிப்படையாகக் கொண்டு, இந்தியா - அமெரிக்கா உறவில் அடுத்த 10 ஆண்டுகளுக்கான மிக வலுவான அடித்தளத்தை அமைக்கத் தான் விரும்புவதாகவும், குறிப்பாக அடுத்த இரண்டு ஆண்டுகள், இரு நாட்டு உறவையும் மிக நீண்ட காலப் பாதையில் கொண்டு செல்வதற்கான திருப்புமுனையாக அமையும் என்றும் தூதர் செர்ஜியோ கோர் தனது உரையில் தீர்க்கமாகத் தெரிவித்துள்ளார்.

AthibAn Tv