“'தொட்டா விடமாட்டேன்' என்று பொங்கிய முதல்வர், சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கியவரை சேர்ப்பது ஏன்?” - தவெக அரசை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்!
சென்னை: "அதிமுக எம்.எல்.ஏ-க்களைத் தொடர்ந்து விலகச் செய்து, தவெக அரசு நடத்தி வரும் ஆள் பிடிக்கும் அரசியல் மக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகம்" என்று எதிர்க்கட்சித் தலைவரும், திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மிகக் காரசாரமாகச் சாடியுள்ளார். மேலும், தவெக அரசின் இந்த 'வாஷிங் மெஷின்' அரசியலுக்கு இடைத்தேர்தல்கள் மூலம் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மற்றொரு நாள்... மற்றுமொரு ராஜினாமா!
அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, தவெக அரசின் குதிரை பேர அரசியல் குறித்துத் தனது அதிகாரபூர்வ எக்ஸ் (X) தளப் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள கண்டனப் பதிவில் கூறியிருப்பதாவது:
"மற்றொரு நாள். மற்றுமொரு ராஜினாமா. இந்த 'சோஃபா மாடல்' ஆட்சி அமைந்த பிறகு, அதிமுகவைச் சேர்ந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் 6-ஆவது எம்.எல்.ஏ-வாக இன்று தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
தற்போதைய ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல் தமிழ்நாட்டில் எந்த அளவுக்குத் தீவிரமாக அரங்கேறி வருகிறது என்பதையே இது அப்பட்டமாகக் காட்டுகிறது."
"ஆதரவு அளித்த கட்சிகள் மீது நம்பிக்கையில்லை!"
தவெக அரசை அடுக்கடுக்கான கேள்விகளால் சாடிய உதயநிதி ஸ்டாலின், "தற்போது ஆட்சி அமைக்கத் தங்களுக்கு ஆதரவு அளித்த கூட்டணிக் கட்சிகளின் மீது சிறிதும் நம்பிக்கையின்றி, நிறுத்தாமல் தொடர்ந்து எம்.எல்.ஏ-க்கள் பர்ச்சேஸை (MLA Purchase) தவெக அரசு செய்து வருவது, ஜனநாயகத்திற்கும் வாக்களித்த மக்களுக்கும் இழைக்கின்ற மாபெரும் துரோகமாகும்.
சட்டமன்றத் தேர்தலின் போது ‘தொட மாட்டேன் - தொட்டா விட மாட்டேன்’ என்று எழுதி வைக்கப்பட்ட ஸ்கிரிப்ட் படி மேடைகளில் பொங்கி எழுந்த தற்போதைய முதல்வர், அடுத்த சீனில், சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கியிருக்கும் ஒருவரைத் தன் கட்சியில் சேர்க்க இவ்வளவு துடியாய்த் துடிப்பதும், முயல்வதும் ஏன்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சோஃபா மாடல் அரசின் 'வாஷிங் மெஷின்' அரசியல்:
தவெக அரசை 'வாஷிங் மெஷின்' என்று விமரிசித்துள்ள அவர், "ஊழல் வழக்குகளில் சிக்கியவர்களைத் தன் பக்கம் இழுத்து தூய்மையாக்க நினைக்கும் 'சோஃபா மாடல்' அரசின் இந்த வாஷிங் மெஷின் அரசியலைத் தமிழ்நாடு மக்கள் உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தவெக அரசின் சுயநல அரசியலால் மக்கள் மீது திணிக்கப்படும் இந்த அடுத்தடுத்த இடைத்தேர்தல்கள் மூலம், தமிழக வாக்காளர்கள் இந்த ஆட்சிக்கு மிக விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள்" என்று உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில் மிக அழுத்தமாகத் தெரிவித்துள்ளார்.
அதிமுக எம்.எல்.ஏ-க்களின் அடுத்தடுத்த ராஜினாமா மற்றும் தவெகவின் அரசியல் நகர்வுகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள இந்த 'வாஷிங் மெஷின்' அரசியல் விமர்சனம் தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.



AthibAn Tv