காஷ்மீர் நர்ஸ் சர்லா பட் கொலை வழக்கு: 35 ஆண்டுகளுக்குப் பின் யாசின் மாலிக் மீது குற்றப்பத்திரிகை
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீரி பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த செவிலியர் (நர்ஸ்) சர்லா பட் கடத்தப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இக்கொடூரச் சம்பவத்தில் தொடர்புடைய ஜே.கே.எல்.எஃப் (JKLF) தீவிரவாத அமைப்பின் தலைவர் யாசின் மாலிக் உள்ளிட்டோர் மீது மாநில புலனாய்வு அமைப்பு (SIA) நீதிமன்றத்தில் 737 பக்கங்கள் கொண்ட விரிவான குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யவுள்ளது. கடந்த 1990-ம் ஆண்டு ஏப்ரல் 18-ம் தேதி, ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வந்த சர்லா பட், தீவிரவாதிகளால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு கடுமையான சித்திரவதைகளுக்குப் பின் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அக்காலகட்டத்தில் பள்ளத்தாக்கில் நிலவிய தீவிரவாதச் சூழல் மற்றும் சாட்சிகளுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்களால் இந்த வழக்கின் உண்மைகள் பல ஆண்டுகளாக வெளிவராமல் முடக்கப்பட்டிருந்தன.
தற்போது சிறப்பு புலனாய்வுக் குழு நடத்திய தீவிர விசாரணையில், இந்தச் சதியின் பின்னணியில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் அன்றைய தலைமை கமாண்டராக இருந்த முகமது யாசின் மாலிக், குர்ஷித் அகமது சல்கூ, அப்துல் ஹமீத் ஷேக், முகமது யூசுப் சோஃபி மற்றும் குலாம் முகமது தப்லூ ஆகியோர் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் அப்துல் ஹமீத் ஷேக், முகமது யூசுப் மற்றும் குலாம் முகமது ஆகியோர் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், முக்கிய குற்றவாளியான யாசின் மாலிக் தற்போது மற்றொரு வழக்கில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், சர்லா பட்டை நோக்கித் துப்பாக்கியால் சுட்ட தீவிரவாதியான குர்ஷித் அகமது சல்கூ, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குத் தப்பியோடிவிட்டதால், அவரைத் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து சட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


AthibAn Tv