மருத்துவ உலகின் கொடூர அலட்சியம்: கண் சொட்டு மருந்துக்குப் பதில் இருமல் மருந்தை ஊற்றிய அரசு மருத்துவமனை! 19 மாதக் குழந்தைக்குப் பார்வை பறிபோனது!
பண்டா (மத்திய பிரதேசம்): மத்திய பிரதேச மாநில அரசு மருத்துவமனை ஊழியர்களின் மிகக் கொடூரமான மற்றும் பொறுப்பற்ற அலட்சியப் போக்கின் காரணமாக, வெறும் 19 மாதமே ஆன ஆண் குழந்தை ஒன்றின் கண் பார்வை நிரந்தரமாகப் பறிபோயுள்ள அதிர்ச்சிச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
1. சளி, இருமலுக்கு வந்த சோதனை:
மத்திய பிரதேச மாநிலம், பூசா கல்பூர் கிராமத்தைச் சேர்ந்த இந்திரராஜ் என்பவர், தனது 19 மாதக் கைக்குழந்தைக்கு லேசான சளி, இருமல் மற்றும் கண்கள் சிவந்திருந்ததன் காரணமாகப் பண்டா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
அங்குப் பணியில் இருந்த குழந்தை நல மருத்துவர் ஹிமான்ஷு வர்மா குழந்தையைப் பரிசோதித்து விட்டு, அதற்கான கண் சொட்டு மருந்து (Eye Drops), பாராசிட்டமால் மற்றும் பிற மருந்து மாத்திரைகளைப் பரிந்துரைத்து (Prescription) எழுதியுள்ளார்.
2. மருந்தக ஊழியர்களின் விபரீதத் தவறு:
மருத்துவர் கொடுத்த சீட்டைக் கொண்டு மருத்துவமனை மருந்தகத்தில் (Pharmacy) காட்டியபோது, அங்கிருந்த ஊழியர்கள் மருந்துகளை எடுத்துத் தந்துள்ளனர். அப்போது, சொட்டு மருந்து போடும் பணியில் இருந்த ஊழியர்கள், தீவிர கவனக்குறைவாகக் கண் சொட்டு மருந்துக்குப் பதிலாக, இருமல் மருந்தை (Cough Syrup) அப்படியே அந்தக் குழந்தையின் கண்களில் விட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இருமல் மருந்து கண்களில் பட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே குழந்தை வலியால் அலறித் துடித்துள்ளது. மேலும் கண்களின் நிலைமை மிக மோசமடைந்து வீங்கியதை அடுத்து, பதறிப்போன பெற்றோர் குழந்தையை உடனடியாகப் போபாலில் உள்ள உயர்தர எய்ம்ஸ் (AIIMS - Bhopal) மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
3. "பார்வை மீளாது" - எய்ம்ஸ் மருத்துவர்கள் அதிர்ச்சித் தகவல்!
போபால் எய்ம்ஸ் மருத்துவமனையில் குழந்தையை அவசரப் பிரிவில் அனுமதித்த கண் மருத்துவ நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும், வீரியமிக்க இருமல் மருந்தின் வேதிப்பொருட்கள் கண்ணின் விழித்திரையை முற்றிலும் கருகச் செய்ததால், குழந்தை தனது கண் பார்வையை நிரந்தரமாக இழந்துவிட்டது என்ற அதிர்ச்சியான உண்மையை மருத்துவர்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
4. காவல் நிலையத்தில் தந்தை புகார்:
முறையான பயிற்சியற்ற, பொறுப்பற்ற அரசு ஊழியர்களின் அலட்சியத்தால் தன் மகனின் ஒட்டுமொத்த எதிர்காலமும் இருண்டுவிட்டதாகக் கண்ணீர் மல்கிய தந்தை இந்திரராஜ், தவறு செய்த மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவர் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரி பண்டா காவல் நிலையத்தில் பரபரப்புப் புகார் அளித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்துப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிரம் காட்டி வரும் வேளையில், இந்த விவகாரம் மத்திய பிரதேச மாநில மருத்துவத் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


AthibAn Tv