போலி PSTM சான்றிதழ் மூலம் குரூப்-1 பணி: டிஎன்பிஎஸ்சி-யின் அதிரடி நடவடிக்கையை ரத்து செய்ய உயர் நீதிமன்ற மதுரை அமர்வு மறுப்பு!
மதுரை:
தமிழ்வழியில் கல்வி பயின்றோருக்கான (PSTM) 20 சதவீத முன்னுரிமை இடஒதுக்கீட்டுச் சலுகையில், போலிச் சான்றிதழ்களைத் தாக்கல் செய்து குரூப்-1 பணிகளில் சேர்ந்தவர்கள் மீதான டிஎன்பிஎஸ்சி-யின் (TNPSC) அதிரடி நடவடிக்கையை ரத்து செய்ய உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடியாக மறுத்துவிட்டது. மோசடி மூலம் அரசுப் பணியைப் பெற முடியாது எனக் கூறி, இதுதொடர்பான அனைத்து மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-1 தேர்வில் தமிழ்வழிச் சலுகை அடிப்படையில் மதுரையைச் சேர்ந்த கலைவாணி, திருநங்கை சொப்னா, சதீஷ்குமார், சங்கீதா உள்ளிட்டோர் துணை ஆட்சியர், வணிகவரித் துறை உதவி ஆணையர், டி.எஸ்.பி. (DSP) ஆகிய உயர் பதவிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுப் பணி நியமனம் பெற்றனர். இவர்கள் போலிச் சான்றிதழ் கொடுத்துச் சலுகை பெற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சான்றிதழ்கள் போலி எனத் தெரிந்ததால், இவர்களின் பணித் தேர்வை ரத்து செய்து டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டதுடன், அவர்கள் பணியிடை நீக்கமும் (Suspension) செய்யப்பட்டனர்.
டிஎன்பிஎஸ்சி-யின் இந்த நடவடிக்கையையும், தங்களின் சான்றிதழ்கள் உண்மையானவை அல்ல என்று மதுரை காமராசர் பல்கலைக்கழகம் அளித்த அறிக்கையையும் ரத்து செய்யக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
காமராசர் பல்கலைக்கழகத்தின் அறிக்கை: வெளிச்சத்திற்கு வந்த முரண்பாடுகள்!
இந்த மனுக்களை விரிவாக விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி, டிஎன்பிஎஸ்சி-யின் நடவடிக்கைக்கு முன்பு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீக்கிப் பிறப்பித்த அதிரடி உத்தரவு வருமாறு:
"மனுதாரர்கள் 20 சதவீத தமிழ்வழி முன்னுரிமை அடிப்படையில் குரூப்-1 தேர்வில் வென்று உயர் பதவிகளில் சேர்ந்துள்ளனர். இவர்களின் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை கோரிய விளக்கத்திற்கு, 'மனுதாரர்கள் தாக்கல் செய்த தமிழ்வழிக் கல்விச் சான்றிதழ்கள் முற்றிலும் போலியானவை' என்று மதுரை காமராசர் பல்கலைக்கழகம் திட்டவட்டமாகப் பதிலளித்துள்ளது.
மனுதாரர்கள் தொலைதூரக் கல்வி (Distance Education) வழியாக, வெவ்வேறு மையங்கள் மூலம் பட்டம் பெற்றுள்ளனர். இவர்கள் பட்டப்படிப்புக்கு விண்ணப்பித்த மையங்கள் மற்றும் சேர்க்கை மையங்கள் தொடர்பாகப் பல்வேறு முரண்பாடுகள் நீடிக்கின்றன. மேலும், மனுதாரர்கள் தங்களின் இறுதி ஆண்டுப் படிப்பில் அனைத்துப் பாடங்களிலும் ஒரே பருவத்தில் (Semester) தேர்ச்சி பெற்றுள்ளனர். இது மிகப்பொரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது."
"அரசுப் பணி என்பது மோசடியால் பெறுவது அல்ல" - நீதிபதி கடும் கண்டனம்!
அரசுப் பணிகளின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டிய நீதிபதி பி.புகழேந்தி, "அரசுப் பணியில் தங்களின் கடமைகளைச் செவ்வனே நிறைவேற்ற நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் ஒழுக்கம் ஆகியவை மிக மிக அவசியமானவை. அரசுப் பணி நியமனங்கள் அனைத்தும் முழுமையாகச் சட்டத்திற்கு உட்பட்டே வழங்கப்பட வேண்டும். மாறாக, மோசடி அல்லது சதித் திட்டங்கள் மற்றும் சூழ்ச்சிகள் மூலம் அரசுப் பணிகளைப் பெற முடியாது" என்று தனது உத்தரவில் கடுமையாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக, சான்றிதழ் மோசடியில் ஈடுபட்ட மனுதாரர்களின் அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்த நீதிமன்றம், அவர்களுக்கு எதிரான டிஎன்பிஎஸ்சி-யின் தடை நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை முழுமையாக விலக்கிக் கொள்வதாக உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பு அரசுப் பணித் தேர்வுகளில் முறைகேடு செய்ய நினைப்போருக்குப் பெரும் எச்சரிக்கையாக அமைந்துள்ளது.


AthibAn Tv