திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள் செல்போன் பயன்படுத்த முழுமையான தடை: நேற்று முதல் தீவிர அமல் – மீறினால் பறிமுதல் என எச்சரிக்கை!
திருச்செந்தூர்:
உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்வதற்கும், பயன்படுத்துவதற்கும் விதிக்கப்பட்டிருந்த தடை நேற்று முதல் மிகத் தீவிரமாக அமுல்படுத்தப்பட்டுள்ளது. தடையை மீறி செல்போன் பயன்படுத்தினால் அது உடனடியாகப் பறிமுதல் செய்யப்படும் என்று கோயில் நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது.
திருச்செந்தூர் கோயிலுக்குள் பக்தர்கள் செல்போன் பயன்படுத்துவதால் ஆன்மீகச் சூழல் பாதிக்கப்படுவதாக எழுந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, கோயிலுக்குள் செல்போன் பயன்படுத்தத் தடை விதித்து முன்னரே உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில், கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் 14-ம் தேதி முதல் இத்தடை பெயரளவில் விதிக்கப்பட்டிருந்தாலும், அது முழுமையாக நடைமுறைக்கு வராமல் இருந்தது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை 100 சதவீதம் தீவிரமாகச் செயல்படுத்தும் நோக்கில், ஜூலை மாதம் முதல் இத்தடை முழு வீச்சில் அமல்படுத்தப்படும் என கோயில் நிர்வாகம் அண்மையில் எச்சரித்திருந்தது.
மெட்டல் டிடெக்டர் சோதனை:
கோயில் நிர்வாகத்தின் அறிவிப்பின்படி, நேற்று முதல் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் செல்போன் தடை முழுமையாக அமலுக்கு வந்தது. கோயிலின் நுழைவு வாயில்களில் வைக்கப்பட்டிருந்த 'மெட்டல் டிடெக்டர்' (Metal Detector) பாதுகாப்புப் கருவிகள் மூலம், பாதுகாப்புப் பணியாளர்கள் ஒவ்வொரு பக்தரையும் தீவிர சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதித்தனர். இதனால் பக்தர்கள் யாரும் கோயிலுக்குள் செல்போன்களை மறைத்து எடுத்துச் செல்ல முடியாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
ரூ.5 கட்டணத்தில் செல்போன் வைப்பகங்கள் (Locker Room):
கோயிலுக்கு வரும் வெளியூர் மற்றும் உள்ளூர் பக்தர்கள் தங்களது செல்போன்களைப் பாதுகாப்பாக வைப்பதற்காக, கோயில் நிர்வாகத்தின் சார்பில் வளாகத்தின் ஆங்காங்கே தற்காலிகச் 'செல்போன் வைப்பகங்கள்' (Locker Rooms) பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளன.
கோயிலுக்குள் செல்லும் பக்தர்கள் தங்களது செல்போன்களை இந்த வைப்பகங்களில் ஒப்படைத்து, அதற்கான பாதுகாப்புப் பராமரிப்புக் கட்டணமாக ரூ.5 மட்டும் செலுத்திவிட்டு, ரசீதுகளைப் பெற்றுக் கொண்டு தரிசனத்திற்குச் சென்றனர். கோயில் நிர்வாகத்தின் இந்த அதிரடி மற்றும் முறையான பாதுகாப்பு நடவடிக்கையால், திருச்செந்தூர் கோயிலில் செல்போன் சத்தங்கள் இன்றி அமைதியான ஆன்மீகச் சூழல் திரும்பியுள்ளதாக ஆன்மீக அன்பர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


AthibAn Tv