தீவிரவாதப் பட்டியலில் பாகிஸ்தானை மீண்டும் சேர்க்க முயற்சி: அக்டோபர் எஃப்.ஏ.டி.எஃப் (FATF) கூட்டத்தில் இந்தியா ஆதாரங்களைச் சமர்ப்பிக்கத் திட்டம்!
புதுடெல்லி: சர்வதேச அளவில் தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி அளிக்கப்படுவதைத் தடுக்கும் நிதி நடவடிக்கை பணிக்குழுவின் (FATF) சாம்பல் பட்டியலில் (Grey List) பாகிஸ்தானை மீண்டும் சேர்க்க இந்தியா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பான முக்கிய ஆதாரங்களை வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள கூட்டத்தில் சமர்ப்பிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
சாம்பல் பட்டியலும் பாகிஸ்தானின் நிலையும்
பணமோசடி தடுப்பு மற்றும் தீவிரவாத நிதியுதவி தடுப்புக்கான (AML/CTF) சர்வதேசக் கண்காணிப்பு அமைப்பு பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் இயங்கி வருகிறது. இந்த அமைப்பின் கீழ் செயல்படும் நிதி நடவடிக்கை பணிக்குழுவின் (FATF) மிக முக்கியக் கூட்டம் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், உலக அளவில் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் மற்றும் அதற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகளைக் கண்டறிந்து, அவற்றைச் 'சாம்பல் பட்டியலில்' சேர்ப்பது குறித்தும், ஏற்கனவே பட்டியலில் உள்ள நாடுகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்து அவற்றை விடுவிப்பது குறித்தும் விவாதித்து முடிவுகள் எடுக்கப்படும்.
முன்னதாக, தீவிரவாத அமைப்புகளுக்குப் புகலிடம் அளித்து, நிதியுதவி வழங்கி வந்த காரணத்திற்காகப் பாகிஸ்தான் நீண்ட காலமாக இந்தச் சாம்பல் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தது. எனினும், தீவிரவாதத்திற்கு எதிரான சில தற்காலிக நடவடிக்கைகளை எடுத்ததாகக் கூறி, கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பாகிஸ்தான் இப்பட்டியலில் இருந்து தப்பியோடி நீக்கப்பட்டது.
இந்தியா திரட்டியுள்ள வலுவான ஆதாரங்கள்
பாகிஸ்தான் சாம்பல் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட பிறகும், அந்நாட்டு மண்ணிலிருந்து செயல்படும் தீவிரவாத அமைப்புகளுக்கான நிதியுதவிகளும், எல்லை தாண்டிய பயங்கரவாதச் செயல்பாடுகளும் குறையவில்லை என்பதை இந்தியா தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது.
வலுவான உத்தி: வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள எஃப்.ஏ.டி.எஃப் (FATF) மாநாட்டில், உலகளாவிய தடை விதிக்கப்பட்ட தீவிரவாத அமைப்புகளுக்குப் பாகிஸ்தான் அரசு மற்றும் அதன் உளவுத்துறை தொடர்ந்து திரைமறைவில் அளித்து வரும் ஆதரவுகள், நிதிப் பரிமாற்றங்கள் குறித்த உறுதியான வீடியோ பதிவுகள் மற்றும் ஆவணப் பூர்வமான இதரப் பல ஆதாரங்களைச் சமர்ப்பிக்க இந்தியப் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகங்கள் விரிவான திட்டவட்டமான உத்தியை வகுத்துள்ளன.
இதன் மூலம் பாகிஸ்தானை மீண்டும் சர்வதேசக் கண்காணிப்பின் கீழ் கொண்டுவந்து, அதன் பொருளாதார மற்றும் நிதித் தொடர்புகளுக்கு முட்டுக்கட்டை போட இந்தியா உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டி வருகிறது.


AthibAn Tv