"எல்லை தாண்டிய தீவிரவாதத்திற்கு ஆதரவு..." - சிந்து நதி ஒப்பந்த ரத்து நடவடிக்கை தொடரும்: பாகிஸ்தானுக்கு மத்திய அரசு திட்டவட்டமான பதில்!
புதுடெல்லி: எல்லை தாண்டிய தீவிரவாதத்திற்குப் பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதன் காரணமாகவே, சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஒப்பந்த விதிகளுக்கு உட்பட்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நடவடிக்கை தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் குறிப்பிட்டுள்ளார்.
திபெத்தில் உற்பத்தியாகும் சிந்து நதி கட்டமைப்பில் மொத்தம் 6 நதிகள் உள்ளன. இந்த நதி இந்தியாவில் 780 கிலோமீட்டர் தொலைவும், பாகிஸ்தானில் 2,170 கிலோமீட்டர் தொலைவும் பாய்கிறது. உலக வங்கியின் தலையீட்டால் கடந்த 1960-ஆம் ஆண்டில் இந்தியா - பாகிஸ்தான் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க 'சிந்து நதி ஒப்பந்தம்' மேற்கொள்ளப்பட்டது. இதன் உடன்பாட்டின்படி, ராவி, பியாஸ், சட்லஜ் ஆகிய கிழக்கு நதிகளின் நீரை இந்தியாவும், சிந்து, ஜீலம், செனாப் ஆகிய மேற்கு நதிகளின் நீரை பாகிஸ்தானும் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்பட்டிருந்தது.
இந்தச் சூழலில், கடந்த 2025 ஏப்ரல் 22-ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட மிக மோசமான தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிந்து நதி ஒப்பந்தத்தை அதிரடியாக ரத்து செய்தார். இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், அண்மையில் பாகிஸ்தான் மூத்த அமைச்சர்களான அட்டாவுல்லா தரார் மற்றும் முசாதிக் மாலிக் ஆகியோர், "பாகிஸ்தானுக்கு உரிய சிந்து நதியின் நீரைத் தொடும் கைகளை வெட்டுவோம்" என்று சர்ச்சைக்குரிய வகையில் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
பாகிஸ்தான் அமைச்சர்களின் இந்த அச்சுறுத்தலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட இந்த ஒப்பந்த ரத்து நடவடிக்கை எக்காரணம் கொண்டும் திரும்பப் பெறப்படாது என்று மத்திய அரசு தற்போது தெளிவாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.

AthibAn Tv