அமெரிக்கா - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை: அடுத்த சுற்று பாகிஸ்தானில் நடைபெற வாய்ப்பு!
இஸ்லாமாபாத்: அணு ஆயுத தடை ஒப்பந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்கா - ஈரான் இடையே நிலவி வரும் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், அடுத்த சுற்று அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாகத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஈரான் மறுத்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரான் மீது போர்தொடுத்தன. இந்தத் தீவிரச் சூழ்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே தற்காலிகப் போர் நிறுத்தம் ஏற்பட்டு, அமைதிக்கான புரிந்துணர்வு வரைவு ஒப்பந்தம் கடந்த மாதம் 18-ஆம் தேதி எட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 60 நாட்களுக்குள் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி இறுதி ஒப்பந்தத்தை மேற்கொள்ள இருதரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, கடந்த மாதம் 21-ஆம் தேதி சுவிட்சர்லாந்தில் இருதரப்புக்கும் இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் மற்றும் கத்தார் நாட்டுப் பிரதிநிதிகள் நடுவர்களாகச் செயல்பட்ட நிலையில், பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. தற்போது ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் மறைவையடுத்து, அவரின் இறுதிச் சடங்குகள் நடைபெற்று வருவதால் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. அலி கமேனியின் உடல் வரும் 9-ஆம் தேதி அடக்கம் செய்யப்பட உள்ள நிலையில், அதன் பின்னர் வரும் 11-ஆம் தேதி அடுத்த சுற்று பேச்சுவார்த்தை தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கான இடம் இன்னும் அதிகாரப்பூர்வமாக இறுதி செய்யப்படாத நிலையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அல்லது சுவிட்சர்லாந்தின் பர்ஜென்ஸ்டாக் ரிசார்ட் (Bürgenstock Resort) ஆகிய இரண்டில் ஒரு இடத்தில் இது நடைபெற அதிக வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது. இந்த முக்கியப் பேச்சுவார்த்தையின் போது, ஈரானின் அணுசக்தி திட்டம், சர்வதேச தடைகளை விலக்குவது, முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்களை விடுவிப்பது, ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) கடல்வழி பாதுகாப்பு மற்றும் லெபனானில் சண்டை நிறுத்தத்தைத் தொடர்வது உள்ளிட்ட மிக முக்கியமான விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட உள்ளதாகத் தூதரகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

AthibAn Tv