பெட்ரோல், டீசல் விலை குறைப்பு தற்போதைய சூழ்நிலையில் நியாயமானதல்ல: மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி திட்டவட்டம்!
புதுடெல்லி: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரங்களுக்கு மத்தியில், உள்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எப்போது குறைப்பார்கள் என்று நுகர்வோர் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்தச் சூழலில், தற்போதைய சூழ்நிலையில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பது பொருளாதார ரீதியாக நியாயமானதல்ல என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நேற்று திட்டவட்டமாகப் பதிலளித்துள்ளார். மேலும், எரிபொருள் விலை குறைப்பு தற்போதைக்கு சாத்தியமில்லை என்பதையும் அவர் மறைமுகமாக உணர்த்தியுள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, "கடந்த 4 ஆண்டுகளில் இந்தியாவில் பெட்ரோல் விலை வெறும் 5.58 சதவீதமும், டீசல் விலை 6.23 சதவீதமும் மட்டுமே உயர்ந்துள்ளது. அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் இன்னும் சுமார் ரூ.2.18 லட்சம் கோடி அளவிலான நஷ்ட ஈட்டுத்தொகையை (Under-recoveries) சமாளித்து வருகின்றன. மேலும், கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் மிக அதிகமாக இருந்த காலகட்டத்தில் வாங்கப்பட்ட அதிக விலை கொண்ட எண்ணெய் கையிருப்புகளை (Inventory) இன்னமும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வைத்துள்ளன. இதன் காரணமாக உடனடியாக விலையைக் குறைக்க முடியாது" என்று விளக்கமளித்தார்.
உலகளாவிய அரசியல் பதற்றங்கள் குறித்துப் பேசிய அவர், "ஈரான் - அமெரிக்கா போரால் கச்சா எண்ணெய் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முக்கிய கடல் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) கடுமையாக முடங்கியது. இதன் விளைவாக உலகளவில் எண்ணெய் விலை மற்றும் விநியோகம் நேரடியாகப் பாதிக்கப்பட்டது. இத்தகைய கச்சா எண்ணெய் சந்தையில் ஏற்பட்ட பெரும் ஏற்ற, இறக்கங்களில் இருந்து இந்திய நுகர்வோரை மத்திய அரசு பெரும்பாலும் தனது மானியங்கள் மற்றும் வரிச் சீரமைப்புகள் மூலம் பாதுகாத்து வந்துள்ளது. உலகளாவிய நெருக்கடியால் ஏற்பட்ட பெரும்பாலான நிதித் தாக்கங்களை அரசே ஏற்றுக்கொண்டது" என்று குறிப்பிட்டார்.
மேலும், நாட்டின் எரிபொருள் இருப்பு குறித்துப் பேசிய அமைச்சர் புரி, சர்வதேச அளவில் இவ்வளவு பெரிய கச்சா எண்ணெய் நெருக்கடி நிலவிய போதிலும், இந்தியாவில் ஒரே ஒரு சில்லறை விற்பனை நிலையம் (பெட்ரோல் பங்க்) கூட எரிபொருள் இல்லாமல் காலியாக இருந்ததில்லை என்று பெருமிதத்துடன் தெரிவித்தார். தற்போது நாடு முழுவதும் சுமார் 1.07 லட்சம் பெட்ரோல் பங்க்குகள் தங்கு தடையின்றி இயங்கி வருவதாகவும், பொதுமக்களுக்குத் தடையற்ற எரிபொருள் விநியோகத்தை அரசு தொடர்ந்து உறுதி செய்யும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். அமைச்சர் ஹர்தீப் சிங் புரியின் இந்த அறிவிப்பு நுகர்வோரிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தினாலும், நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு இது அவசியம் என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


AthibAn Tv