டெல்லியில் நெகிழ்ச்சி: இந்தியப் பாரம்பரிய ‘சந்தூர்’ இசைக் கருவியை வாசித்து அசத்திய ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி!
புதுடெல்லி: அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி, இந்தியாவின் பாரம்பரிய இசைக்கருவிகளில் ஒன்றான 'சந்தூர்' (Santoor) கருவியை மிகவும் அற்புதமாக இசைத்து அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி சந்தித்துப் பேசினார். அப்போது அவருக்கு இந்திய அரசு சார்பில் சிறப்பான வரவேற்பும், சுவையான இரவு விருந்தும் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது, இந்தியாவின் பல்வேறு பாரம்பரிய இசைக்கருவிகள் மூலம் ஜப்பான் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்குச் சந்தூர் இசைக்கருவியை வாசித்துக் கொண்டிருந்த கலைஞர், ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சியை அதை இசைத்துப் பார்க்குமாறு அன்போடு அழைப்பு விடுத்தார். உடனே அருகில் இருந்த பிரதமர் மோடி, சந்தூர் வாசிப்பதற்கான பிரத்யேகக் கம்பிகளை (Mallets) டகாய்ச்சியிடம் எடுத்துக் கொடுத்தார். பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி, அந்த கம்பிகளைப் பிடித்துச் சந்தூர் கருவியை டகாய்ச்சி மிகவும் அற்புதம் மற்றும் லாவகமாக இசைத்தார். இதைக் கண்டு வியந்த பிரதமர் மோடி உள்ளிட்ட அங்கிருந்த அதிகாரிகள் அனைவரும் கரவொலி எழுப்பி (கைதட்டி) அவருக்குத் தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
டிரம்ஸ் கலைஞர் டகாய்ச்சி: இந்தோ-பெர்சியன் வகை இசைக்கருவிகளில் ஒன்றான சந்தூர், இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மிகவும் புகழ்பெற்றதாகும். இதில் மொத்தம் 100 நரம்பு கம்பிகள் உள்ளதால், பண்டைய காலங்களில் இது ‘‘சத தந்த்ரி வீணை’’ (நூறு கம்பிகள் கொண்ட வீணை) என்று அழைக்கப்பட்டது. மிகவும் சிக்கலான இந்த இசைக்கருவியை, முதல் முயற்சியிலேயே ஜப்பான் பிரதமர் அற்புதமாக வாசித்ததற்குக் காரணம் அவரது இசைப் பின்னணியே ஆகும். பிரதமர் சனே டகாய்ச்சி தனது பள்ளிப் பருவம் முதலே இசையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். குறிப்பாக, அவர் டிரம்ஸ் (Drums) வாசிப்பதில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர் என்பதால், பல்வேறு மேடை கச்சேரிகளிலும் டிரம்ஸ் வாசித்து அசத்தியுள்ளார்.
மறக்க முடியாத உபசரிப்பு: இந்தச் சந்திப்பு குறித்து ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பிரதமர் மோடி எனக்கு மிகச் சிறப்பானதொரு விருந்தினை அளித்து உபசரித்தார். இந்திய உணவு வகைகளின் சுவையையும், பிரதமர் மோடியின் அன்பான உபசரிப்பையும் என் வாழ்நாளில் என்னால் மறக்கவே முடியாது. இந்தச் சந்திப்பில் ஜப்பான் - இந்தியா இடையிலான இருதரப்பு நட்புறவு மட்டுமன்றி, பல்வேறு சர்வதேச விவகாரங்கள் குறித்தும் பிரதமர் மோடியுடன் மனம் திறந்து பேசினேன். இந்த பயணத்தின் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு புதிய உச்சத்தைத் தொடும்’’ என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

AthibAn Tv