இளையராஜா - சரிகம காப்புரிமை வழக்கு: இசையமைப்பாளருக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு!
புதுடெல்லி:
திரைப்படப் பாடல்களுக்கான காப்புரிமை (Copyright) விவகாரத்தில், 'சரிகம' (Saregama) நிறுவனத்தின் பாடல்களைப் பயன்படுத்த இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. அன்னக்கிளி, 16 வயதினிலே, கவிக்குயில், முள்ளும் மலரும், ராஜபார்வை, நெற்றிக்கண், கல்யாணராமன் உள்ளிட்ட 134 புகழ்பெற்ற திரைப்படப் பாடல்களுக்கான காப்புரிமைத் தங்களின் வசம் இருக்கும்போது, அதனை இளையராஜா பயன்படுத்துவது தங்களது காப்புரிமையை மீறிய செயல் எனக் கூறி சரிகம நிறுவனம் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது.
இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி துஷார் ராவ் கெடில்லா, சரிகம நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான குறிப்பிட்ட திரைப்படப் பாடல்களைப் பயன்படுத்த இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கடந்த பிப்ரவரி 16-ம் தேதி இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.
தடையை நீக்கக் கோரிய இளையராஜாவின் முறையீடு தள்ளுபடி:
தங்கள் தரப்பு நியாயங்களை விளக்கியும், இந்த இடைக்கால தடையை உடனடியாக நீக்கக் கோரியும் இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீண்டும் நீதிபதி துஷார் ராவ் கெடில்லா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, சரிகம நிறுவனத்தின் பாடல்களைப் பயன்படுத்த இளையராஜாவுக்கு விதிக்கப்பட்ட முந்தைய இடைக்கால தடையை நீக்கத் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இந்தத் தீர்ப்பு இசை மற்றும் திரைப்படத் துறையினரிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், வழக்கின் அடுத்தகட்ட விசாரணை தொடர்ந்து நடைபெறவுள்ளது.


AthibAn Tv