“ஒரே ஆண்டில் ரூ.95,245 கோடி ஜப்பானிய முதலீடு!”: டெல்லியில் பிரதமர் மோடி - ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு!
புதுடெல்லி: இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையேயான உறவு வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றும், அது இரு நாடுகளுக்கும் இடையே வெற்றிகரமான பொருளாதார இணைப்பைக் கொண்டுள்ளது என்றும் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இந்தியா - ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக முதன்முறையாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ள ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சியைப் பிரதமர் மோடி நேரில் வரவேற்று, இருதரப்பு உறவுகள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் மோடி, கடந்த ஓராண்டில் மட்டும் 10 பில்லியன் டாலருக்கும் அதிகமான (சுமார் ரூ.95,245 கோடி) ஜப்பானிய முதலீடுகள் இந்தியாவிற்குள் வந்துள்ளதாகவும், நூற்றுக்கும் மேற்பட்ட புதிய வணிக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இரு நாடுகளுக்கு இடையேயான தொழில்நுட்பக் கூட்டாண்மை குறித்துப் பேசிய பிரதமர் மோடி, "ஜப்பானின் துல்லியமான தொழில்நுட்பமும், இந்தியாவின் அசாத்திய மென்பொருள் திறன்களும் இணைவது உலகளாவிய செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சிக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கும்" என்றார். இதன் தொடக்கமாக, செயற்கை நுண்ணறிவுத் துறையில் இரு நாடுகளும் இணைந்து ஒரு முக்கியக் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன. மேலும், பாதுகாப்புத் துறையிலும் ஒரு மைல்கல் எட்டப்பட்டுள்ளது. இரு நாடுகளும் இணைந்து பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை உருவாக்கும் நோக்கில், முதலாவது கூட்டு மேம்பாட்டுத் திட்டமான 'கடற்படை வானொலி ஆண்டெனா' (Naval Radio Antenna) திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் இரு தலைவர்களும் கையெழுத்திட்டுள்ளனர். இது இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு மற்றும் அமைதியை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுகாதாரம் மற்றும் எரிசக்தித் துறைகளிலும் இரு நாடுகளும் கைகோர்த்துள்ளன. இந்தியாவின் மருத்துவச் சந்தை அளவையும், ஜப்பானின் தரத்தையும் இணைத்து உலகிற்கு மலிவான, மேம்பட்ட மருத்துவத் தீர்வுகளை வழங்க மருந்து மற்றும் மருத்துவச் சாதனங்கள் துறையில் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், தூய்மையான எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கில் 'இந்தியா - ஜப்பான் உயிரி வாயு முன்முயற்சி' தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் 1,000 உயிரிவாயு மற்றும் இயற்கை உர ஆலைகளை நிறுவுவதற்கு ஆதரவு அளிக்கப்படும் எனப் பிரதமர் மோடி குறிப்பிட்டார். இதுமட்டுமன்றி, உலகளாவிய எண்ணெய் நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கான எரிசக்தி மீள்திறன் திட்டம், மின்கலன்கள் (Batteries), பசுமை ஹைட்ரஜன் மற்றும் அணுசக்தி ஆகிய துறைகளிலும் ஒத்துழைப்பை மேம்படுத்த இரு நாடுகளும் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளன.
வணிகத்தை எளிதாக்கும் வகையில் இந்தியாவில் கொண்டு வரப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் ஜப்பானிய நிறுவனங்களுக்குப் பெரும் பயன் அளிக்கும் என்று குறிப்பிட்ட பிரதமர், அடுத்த 10 ஆண்டுகளில் ஜப்பானில் இருந்து இந்தியாவுக்கு 10 ட்ரில்லியன் யென் முதலீட்டை ஈர்ப்பதே தங்களின் இலக்கு என்றார். மேலும், இந்தியாவில் இயங்கும் ஜப்பானிய நிறுவனங்களின் எண்ணிக்கையை அடுத்த பத்தாண்டுகளில் இரட்டிப்பாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அடுத்த ஆண்டு (2027) இந்திய - ஜப்பான் தூதரக உறவுகளின் 75-வது ஆண்டு விழா கொண்டாடப்பட உள்ளதை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி, கலாச்சாரம் மற்றும் நவீன தொழில்நுட்பம் வரை இரு நாடுகளும் ஒரே மாதிரியான தொலைநோக்குப் பார்வையை அசைக்க முடியாத பரஸ்பர நம்பிக்கையுடன் கொண்டுள்ளதாகத் தனது உரையில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.


AthibAn Tv