இமயமலையில் வரலாற்றுச் சிறப்புமிக்க அமர்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: 4,800 பக்தர்கள் கொண்ட முதல் குழுவை கொடியசைத்து தொடங்கி வைத்தார் துணைநிலை ஆளுநர்!
ஜம்மு: தெற்கு காஷ்மீரின் இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற அமர்நாத் குகைக் கோயிலுக்கான இந்த ஆண்டின் புனித யாத்திரை இன்று (ஜூலை 3) அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,888 மீட்டர் உயரத்தில் இயற்கையாகத் தோன்றும் பனி லிங்கத்தைத் தரிசிப்பதற்காக, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான இந்துப் பக்தர்கள் இந்த சவாலான யாத்திரையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆண்டுக்கான 57 நாட்கள் நீடிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஆன்மீகப் பயணம், வரும் ஆகஸ்ட் 28-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.
இந்த ஆண்டுக்கான யாத்திரை பஹல்காம் மற்றும் பல்தால் ஆகிய இரு அடிவார முகாம்களில் இருந்தும் இன்று ஒரே நேரத்தில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பக்தர்கள் இக்கோயிலை அடைய இரண்டு முக்கிய வழித்தடங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒன்று, அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பாரம்பரியமான 48 கிலோ மீட்டர் தூரம் கொண்ட நுன்வான்-பஹல்காம் வழித்தடம்; மற்றொன்று, கலிந்தர்பால் மாவட்டத்தில் உள்ள குறுகிய ஆனால் மிகவும் செங்குத்தான 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட பல்தால் வழித்தடமாகும். இந்த இரு முகாம்களை நோக்கிய பக்தர்களின் பயணம் நேற்றே தொடங்கியது.
ஜம்மு பகவதி நகர் 'யாத்ரி நிவாஸ்' முகாமில் இருந்து புறப்பட்ட முதல் பக்தர்கள் குழுவின் பயணத்தைத் துணிநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா நேற்று முறைப்படி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். முன்னதாக, பகவதி நகர் முகாமில் ஆளுநர் சின்ஹா முன்னிலையில் சிறப்புப் பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, "ஹர் ஹர் மகாதேவ்" மற்றும் "பாம் பாம் போலே" போன்ற பக்தி முழக்கங்களுக்கு மத்தியில், பலத்த பாதுகாப்புடன் 4,800-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வாகனங்கள் மூலம் தங்களது புனிதப் பயணத்தைத் தொடங்கினர்.
இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை மேற்கொள்வதற்காக இதுவரை 3.90 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தங்களது பெயர்களை முன்பதிவு செய்துள்ளனர். ஆன்லைன் மூலம் பதிவு செய்யத் தவறியவர்களுக்காக, ஜம்முவுக்கு நேரடியாக வந்து தங்கிப் பதிவு செய்யும் சிறப்பு வசதியும் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. காஷ்மீரின் தற்போதைய பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு, ஜம்மு காஷ்மீர் நிர்வாகமும் இந்தியப் பாதுகாப்பு அமைப்புகளும் இணைந்து செய்துள்ள விரிவான தங்குமிடம், உணவு மற்றும் அசாத்திய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துத் தங்களது முழு மனநிறைவை பக்தர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.


AthibAn Tv