Type Here to Get Search Results !

சி.பி.ஐ. வழக்கை முடிக்க ₹3 கோடி லஞ்சம்: டெல்லி ஐ.பி.எஸ். அதிகாரி மற்றும் இன்ஸ்பெக்டர் அதிரடி கைது!


சி.பி.ஐ. வழக்கை முடிக்க ₹3 கோடி லஞ்சம்: டெல்லி ஐ.பி.எஸ். அதிகாரி மற்றும் இன்ஸ்பெக்டர் அதிரடி கைது!

புதுடெல்லி:

புதுச்சேரியில் போலி மருந்துகள் தயாரித்து விற்பனை செய்யும் கும்பல் தொடர்பாகப் பதிவான சி.பி.ஐ. (CBI) வழக்கில் இருந்து தப்பிக்க, தொழிலதிபர் ஒருவரிடம் ₹3 கோடி லஞ்சம் கேட்ட ஐ.பி.எஸ். (IPS) அதிகாரி தீபக் கெஹ்லாவத் மற்றும் டெல்லி காவல் துறை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிரதீப் சிங் உள்ளிட்ட 5 பேரைச் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரியில் சட்டவிரோதமாகப் போலி மருந்துகளைத் தயாரித்து விற்று வந்த கும்பல் குறித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையின் போது புதுச்சேரியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் என். ராஜா என்பவர் முக்கியக் குற்றவாளியாகச் சி.பி.ஐ. வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டார். தன் மீதான இந்த இமாலய வழக்கில் இருந்து எப்படியாவது தப்பிக்க நினைத்த தொழிலதிபர் ராஜா, தனக்குத் தெரிந்த டெல்லி காவல் துறையின் குற்றப்பிரிவு ஆய்வாளர் (Inspector) பிரதீப் சிங்கை அணுகியுள்ளார். அப்போது, தமக்குத் தெரிந்த உயர் அதிகாரிகள் மூலம் சி.பி.ஐ. வழக்கைச் சாதகமாக முடித்துத் தருவதாகப் பிரதீப் சிங் அவருக்கு உறுதியளித்துள்ளார்.

ஹவாலா மூலம் கைமாறிய பணம்: சி.பி.ஐ. விரித்த ரகசிய வலை!

இதனைத் தொடர்ந்து, டெல்லி ஐ.பி.எஸ். அதிகாரி தீபக் கெஹ்லாவத் மற்றும் தொழிலதிபர் ராஜா ஆகியோருக்கு இடையே நேரடி சந்திப்பு ஏற்பட்டுள்ளது. அச்சமயம், சி.பி.ஐ. விசாரணையில் தமக்குள்ள தனிப்பட்ட செல்வாக்கைப் பயன்படுத்தி வழக்கை முழுமையாக முடித்துத் தருவதாகக் கூறி, ராஜாவிடம் ₹3 கோடி தொகையை லஞ்சமாகக் கேட்டுள்ளார் ஐ.பி.எஸ். அதிகாரி தீபக் கெஹ்லாவத்.

இதற்குச் சம்மதித்த தொழிலதிபர் ராஜா, முதல்கட்டமாக 'ஹவாலா' (Hawala) பணப் பரிமாற்ற முறை மூலம் ₹1 கோடியைத் தயார் செய்து இன்ஸ்பெக்டர் பிரதீப் சிங்கிடம் கொடுத்துள்ளார். அதில், முன்பணமாக ₹50 லட்சத்தை ஐ.பி.எஸ். அதிகாரி தீபக் கெஹ்லாவத்திற்கு இடைத்தரகர் ஒருவர் மூலமாகப் பிரதீப் சிங் அனுப்பி வைத்துள்ளார். இந்த சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் குறித்து ரகசியத் தகவல் அறிந்த சி.பி.ஐ. அதிகாரிகள், அதிரடிச் சோதனைகளை நடத்தி ஐ.பி.எஸ். அதிகாரி தீபக் கெஹ்லாவத், இன்ஸ்பெக்டர் பிரதீப் சிங் மற்றும் இடைத்தரகர்கள் உட்பட மொத்தம் 5 பேரைக் கையும் களவுமாகக் கைது செய்தனர். உயர் காவல் துறை அதிகாரிகளே லஞ்ச வழக்கில் சிக்கியிருப்பது டெல்லி மற்றும் புதுச்சேரி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.