இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு முதலீடுகளில் 25% ஆந்திராவுக்கு கிடைக்கிறது: முதல்வர் சந்திரபாபு நாயுடு பெருமிதம்!
நெல்லூர்:
இந்திய நாட்டிற்கு வரும் ஒட்டுமொத்த வெளிநாட்டு முதலீடுகளில் 25 சதவீத முதலீடுகள் ஆந்திர மாநிலத்திற்கு மட்டுமே வருகிறது என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் புன்னபவாரி பாளையத்தில் நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.
அப்போது பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, "தொழில்துறை வளர்ச்சியில் ஆந்திரா தற்போது மிகவும் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. ஆந்திராவின் கூடூர் பகுதியில் விரைவில் 'மெகா பர்னிச்சர் பார்க்' (Mega Furniture Park) அமைய உள்ளது. இதன் மூலம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். முந்தைய ஆட்சிக்காலத்தில் நிலவிய சூழல் காரணமாக, ஆந்திராவில் தொழில் தொடங்கிய பலர் வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றனர். ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. எங்கள் அரசு தொழில் அதிபர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தித் தந்துள்ளதால், ஆந்திராவைத் தேடி வந்து தொழில் தொடங்கப் பலர் வரிசையில் நிற்கிறார்கள்" என்று குறிப்பிட்டார்.
"ஏழ்மையை ஒழிப்பதே ஒரே குறிக்கோள்": 62 லட்சம் பேருக்கு உதவித்தொகை!
தொடர்ந்து தங்களது கூட்டணி அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்துப் பேசிய சந்திரபாபு நாயுடு, "எங்கள் கூட்டணி அரசு ஏழை எளிய மக்களுக்கு எப்போதுமே உறுதுணையாக நின்று, அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தப் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ஏழ்மையை ஒழிப்பதையே ஒரே குறிக்கோளாகக் கொண்டு நாங்கள் பாடுபட்டு வருகிறோம்" என்றார்.
மேலும், மாநிலத்தில் ஒவ்வொரு மாதமும் 1-ஆம் தேதி அன்றே முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகள் உள்ளிட்ட ஆதரவற்றோரின் கைகளில் நேரடியாக உதவித்தொகை வழங்கப்பட்டு வருவதாகவும், இந்தத் திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் சுமார் 62.20 லட்சம் பேர் தடையின்றிப் பயனடைந்து வருகிறார்கள் என்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது உரையில் சுட்டிக்காட்டினார்.


AthibAn Tv