விஜயவாடாவில் கார் மீது கண்டெய்னர் லாரி மோதி கோர விபத்து: பெண் உட்பட 3 பேர் பரிதாப உயிரிழப்பு!
விஜயவாடா: ஆந்திர மாநிலம் விஜயவாடா புதிய பைபாஸ் சாலையில் இன்று அதிகாலை நேரிட்ட பயங்கர சாலை விபத்தில் பெண் மற்றும் அவரது மகன் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கண்டெய்னர் லாரியின் டயர் வெடித்ததே இந்த விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
டயர் பஞ்சராகி கட்டுப்பாட்டை இழந்த லாரி
விஜயவாடா புதிய பைபாஸ் சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அதற்குப் பின்னால் அதிவேகமாக வந்த கண்டெய்னர் லாரியின் டயர் திடீரென பஞ்சராகி வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, கண் இமைக்கும் நேரத்தில் முன்னால் சென்று கொண்டிருந்த காரின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
மூன்று பேர் பலி; ஒருவர் படுகாயம்
இந்தக் கோர விபத்தில் காரில் பயணம் செய்த ஜெயமங்கள நாக துர்கா மற்றும் அவரது மகன் நாக சாய் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், அதே நேரத்தில் அந்தச் சாலையில் இருசக்கர வாகனத்தில் எதிரே வந்த சிங்நகரைச் சேர்ந்த வெங்கடேஸ்வர ராவ் (50) என்பவரது மீதும் லாரி மோதியதில் அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். காரில் இருந்த விஜயகுமார் என்பவர் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். விபத்து குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், காயமடைந்த விஜயகுமாரை மீட்டு சிகிச்சைக்காக விஜயவாடா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இவிபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

AthibAn Tv