கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 22-ஆம் ஆண்டு நினைவு தினம்: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை கோரும் பெற்றோர்!
கும்பகோணம்:
தமிழகத்தையே உலுக்கிய கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி தீ விபத்தின் 22-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (வியாழக்கிழமை) அனுசரிக்கப்பட்டது. கடந்த 2004-ஆம் ஆண்டு ஜூலை 16 அன்று கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் ஏற்பட்ட கோரத் தீ விபத்தில் 94 பிஞ்சு குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர்; 18 குழந்தைகள் படுகாயமடைந்தனர். ஆறாத வடுவாக மாறிய இந்நாளின் 22-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, விபத்து நடந்த பள்ளி வளாகத்தின் முன்பும், பாலக்கரையில் உள்ள நினைவு மண்டபத்திலும் உயிரிழந்த குழந்தைகளின் உருவப்படங்களுக்குப் பெற்றோர், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் மல்க மலர் வளையம் வைத்து, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
அரசியல் பிரமுகர்கள் அஞ்சலியும் உள்ளூர் விடுமுறை கோரிக்கையும்:
இந்நிகழ்வில் திமுக தஞ்சை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சாக்கோட்டை க. அன்பழகன், திருவிடைமருதூர் எம்எல்ஏ கோவி. செழியன், கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன் மற்றும் அதிமுக, தமிழக வெற்றி கழகம், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் அமைப்புகளின் பிரதிநிதிகளும், சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். விபத்தில் உயிரிழந்த சுஷ்மிதாவின் சகோதரி மதுமிதா பேசுகையில், "22 ஆண்டுகள் கடந்தும் இந்தத் துயரம் மனதை விட்டு நீங்கவில்லை. ஆண்டுதோறும் ஜூலை 16-ஆம் தேதியன்று கும்பகோணம் வட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை வழங்க வேண்டும் என்ற எங்களது நீண்டகாலக் கோரிக்கையைத் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். மேலும், மாணவர் அறன் அமைப்பின் தலைவர் சைமன், இந்நாளைக் 'குழந்தைகள் பாதுகாப்பு தினமாக' அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வேலை கோரிக்கை:
அஞ்சலி கூட்டத்தில் பங்கேற்ற உயிரிழந்த இரண்டு குழந்தைகளின் தந்தை இன்பராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், அண்மையில் கரூரில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்குத் தகுதியின் அடிப்படையில் தமிழக வெற்றி கழக (தவெக) தலைவர் விஜய் அவர்கள் அரசுப் பணி வழங்கியுள்ளதைச் சுட்டிக்காட்டினார். அதேபோல, கல்வி கற்கச் சென்று தீ விபத்தில் பலியான எங்களது 94 குழந்தைகளின் குடும்பங்களுக்கும் தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். இக்கோரிக்கையை முன்வைத்து, கும்பகோணம் எம்எல்ஏ-வும், வேளாண்மைத் துறை அமைச்சருமான வினோத் மூலமாகத் தமிழக முதல்வர் விஜய்யைச் சந்தித்து மனு அளிக்கப் பெற்றோர்கள் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மாலையில் உயிரிழந்த குழந்தைகளின் ஆன்மா சாந்தியடைய மகாமகக் குளத்தில் மோட்ச தீபம் ஏற்றப்பட உள்ளது.

AthibAn Tv