“புதிய தரத்தில் ஜரிகை பார்டர்!”: 2027 பொங்கல் இலவச வேட்டி-சேலை திட்டத்திற்கு முதல்கட்டமாக ரூ.300 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
சென்னை: தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2027) தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்குப் புதிய பொலிவு மற்றும் கூடுதல் தரத்துடன் இலவச வேட்டி-சேலைகள் வழங்கப்பட உள்ளதாகக் கைத்தறித் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசும் இந்த மக்கள் நலத் திட்டத்தைத் தொய்வின்றித் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான முதல்கட்டப் பொருட்கள் கொள்முதல் மற்றும் உற்பத்திப் பணிகளுக்காக ரூ.300 கோடி நிதியை உடனடியாக ஒதுக்கித் தமிழக அரசு அதிரடி அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாகக் கைத்தறித் துறைச் செயலாளர் தி.ந.வெங்கடேஷ் வெளியிட்டுள்ள அரசாணையில், பொதுமக்களுக்கு நியாயவிலைக் கடைகள் (ரேஷன் கடைகள்) வழியாக விலையில்லா வேட்டி-சேலைகள் வழங்கும் இத்திட்டத்தைத் துரிதமாக முன்னெடுக்க அரசு உயர்நிலைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். நடப்பாண்டில் பயனாளிகளைக் கணக்கீடு செய்வதற்காக மாவட்ட வாரியாக விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. அதன்படி, வரும் பொங்கலுக்கு ஒட்டுமொத்தமாக 2 கோடியே 27 லட்சத்து 83,417 சேலைகளும், 2 கோடியே 25 லட்சத்து 14,094 வேட்டிகளும் கொள்முதல் செய்ய வேண்டிய தேவை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இருப்பினும், தற்போதைய உற்பத்திப் பணிகளுக்கான கால அவகாசம் குறைவாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, கடந்த 3 ஆண்டுகளைப் போலவே முதல்கட்டமாகச் சுமார் 177.64 லட்சம் சேலைகளும், 177.22 லட்சம் வேட்டிகளும் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதலாகத் தேவைப்படும் வேட்டி மற்றும் சேலைகள் அடுத்தடுத்த கட்டங்களில் தடையின்றி உற்பத்தி செய்யப்படும். குறிப்பாக, இந்த ஆண்டு நெசவுத் தரம் உயர்த்தப்பட்டுப் புதிய ரக நூலில் ஆடைகள் நெய்யப்பட உள்ளன. சேலைகளில் கண்கவர் சில்வர் (வெள்ளி) அல்லது காப்பர் (செம்பு) நிற ஜரிகை பார்டர்களும், வேட்டிகளில் வண்ணமயமான பாலியஸ்டர் பார்டர்களும் இடம்பெறப் போவது இம்முறை தனிச்சிறப்பாகும்.
இந்தத் திட்டத்தின் மொத்த கொள்முதல் மற்றும் உற்பத்தி மதிப்பு ரூ.642.88 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள கைத்தறி, பெடல் தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு ஆண்டு முழுவதும் தொடர்ச்சியான வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் பலன்கள் தகுதியான பயனாளிகள் அனைவருக்கும் முழுமையாகச் சென்றடைய வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. அதன்படி, குடும்ப அட்டை இல்லாத முதியோர் ஓய்வூதியத் திட்டப் பயனாளிகள், தங்களது கைவிரல் ரேகை மூலம் அடையாளத்தை உறுதி செய்த பிறகு இலவச வேட்டி, சேலைகளைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும், கடந்த 2026 பொங்கல் திட்டத்தில் எஞ்சியுள்ள பழைய வேட்டி, சேலைகள் அனைத்தும், நடப்பாண்டு வரவிருக்கும் தீபாவளி பண்டிகையின் போது முதியோர் ஓய்வூதியத் திட்டப் பயனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் என்றும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


AthibAn Tv