அதிமுகவில் இருந்து அதிரடி விலகல்: மாமல்லபுரத்தில் 15,000 ஆதரவாளர்களுடன் இன்று தவெக-வில் இணைகிறார்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர்!
சென்னை:
தமிழக அரசியலில் மீண்டும் ஒரு பெரும் திருப்பமாக, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, சுமார் 15,000 ஆதரவாளர்களுடன் இன்று (வியாழக்கிழமை) முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைகிறார்கள்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று காலை 10 மணியளவில் இந்த பிரம்மாண்ட இணைப்பு விழா நடைபெறவுள்ளது. தவெக அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் முன்னிலையில் இந்த முக்கியப் புள்ளிகள் கட்சியில் ஐக்கியமாக உள்ளனர்.
முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் என 15,000 நிர்வாகிகள் தவெக-வில் ஐக்கியம்:
இந்த இணைப்பு விழாவில் விஜயபாஸ்கர் சகோதரர்களுடன் சேர்த்து அதிமுகவின் முக்கியத் தலைவர்கள் பலரும் தவெக-வில் இணையவுள்ளது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் அமைச்சர்கள்: எஸ்.வளர்மதி (திருச்சி), எம்.எஸ்.எம்.ஆனந்தன் (திருப்பூர்).
முன்னாள் எம்.எல்.ஏ-க்கள்: மான்ராஜ் (ஸ்ரீவில்லிபுத்தூர்), எம்.ராம்குமார் (கும்பகோணம்), ராஜவர்மன் (திருச்சுழி), சதன்பிரபாகர் (பரமக்குடி), திருஞானசம்பந்தம் (பேராவூரணி).
மாவட்ட செயலாளர்கள்: பி.கே.வைரமுத்து (புதுக்கோட்டை), இளம்பை தமிழ்செல்வன் (பெரம்பலூர்), மா.சேகர் (தஞ்சை - ஒரத்தநாடு), சீனிவாசன் (திருச்சி).
இவர்களுடன் சேர்த்து சுமார் 208 ஒன்றிய செயலாளர்களும், ஆயிரக்கணக்கான தொண்டர்களும் தவெக-வில் இணைய உள்ளனர். இந்த இணைப்பு விழாவிற்காகக் கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200 பஸ்கள் மற்றும் 600 கார்கள் மூலம் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மாமல்லபுரத்தில் குவிந்துள்ளனர்.
"திமுக - அதிமுக கூட்டணி இயற்கைக்கு மாறானது" - இபிஎஸ் மீது முன்னாள் அமைச்சர்கள் கடும் காட்டம்!
தவெக-வில் இணைவது குறித்து சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் கூட்டாக அளித்த அதிரடிப் பேட்டியில் கூறியிருப்பதாவது:
"நாங்கள் இருவரும் அதிமுக என்ற இயக்கத்திற்கு என்றுமே துரோகம் நினைத்தது கிடையாது. கட்சியின் விசுவாசிகளாக இருந்து, பல்வேறு சோதனையான காலக்கட்டங்களில் வேதனைகளைத் தாங்கிக்கொண்டு இயக்கத்திற்கு உறுதுணையாக நின்றோம். கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, தவெக-வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் பலமுறை வலியுறுத்தினோம். ஆனால், அவர் எங்கள் பேச்சை மதிக்கவில்லை.
அதற்கு மாறாக, அவர் திமுகவின் மறைமுக ஆதரவோடு மீண்டும் முதலமைச்சராக முயற்சித்தார். தற்போது உருவாகியுள்ள 'திமுக - அதிமுக' கூட்டணி என்பது இயற்கைக்கு மாறானது மட்டுமன்றி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். இந்த இயக்கத்தைத் தோற்றுவித்த நோக்கத்திற்கே முற்றிலும் எதிரானது. எடப்பாடி பழனிசாமியின் இத்தகைய சுயநல நடவடிக்கைகளால் விரக்தி அடைந்துதான், மனமெல்லாம் தீராத வேதனையைச் சுமந்தபடி, கண்ணீரோடு அதிமுகவில் இருந்து விலகும் முடிவை எடுத்தோம். தமிழகத்திற்கு ஒரு நல்வழியைத் தரக்கூடிய தவெக-வில் இன்று எங்களை இணைத்துக் கொள்கிறோம்."
அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் மாவட்டங்களில் இருந்து அக்கட்சியின் முக்கியத் தூண்கள் ஆளுங்கட்சியான தவெக-வில் இணையவுள்ளதால், தமிழக அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.


AthibAn Tv