“ஜெயலலிதா போல என்எல்சி பங்குகளை தவெக அரசே வாங்க வேண்டும்” - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி கோரிக்கை!
சென்னை: லாபகரமாக இயங்கி வரும் என்எல்சி (NLC) நிறுவனத்தின் பங்குகளை மத்திய அரசு தனியாருக்கு விற்பனை செய்ய முயல்வதைத் தடுத்து நிறுத்த, தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழியைப் பின்பற்றி, தற்போதைய தவெக அரசே அந்தப் பங்குகளை வாங்க முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
லாபத்தில் இயங்கும் என்எல்சி; தனியாருக்கு விற்க முயற்சி?
இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் என்எல்சி நிறுவனம், 'நவரத்தினா' அந்தஸ்து பெற்ற ஒரு முக்கியப் பொதுத்துறை நிறுவனமாகும். நடப்பாண்டில் மட்டும் இந்நிறுவனம் சுமார் 3,769 கோடி ரூபாயை லாபமாக ஈட்டியுள்ளது. இப்படி லாபகரமாக இயங்கி வரும் ஒரு பொதுத்துறை நிறுவனத்தின் 3 சதவீத பங்குகளை, பங்குச் சந்தை மூலம் தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன."
2013-ல் ஜெயலலிதா நடத்திய வரலாற்றுச் சாதனை:
கடந்த காலங்களில் அதிமுக எடுத்த உறுதியான நடவடிக்கைகளை நினைவூட்டிய அவர், "கடந்த 2006-ம் ஆண்டு என்எல்சி-யின் 10 சதவீத பங்குகளை விற்க அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு முயன்றபோது, ஜெயலலிதா விடுத்த கடுமையான எச்சரிக்கையால்தான் அந்த முயற்சி கைவிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, 2013-ம் ஆண்டு மீண்டும் 5 சதவீத பங்குகளை விற்க மத்திய அரசு முயன்றபோது, அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழக அரசுக்கு இருந்த கடும் நிதி நெருக்கடிக்கு இடையிலும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்தார். சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பில், 3.56% என்எல்சி பங்குகளைத் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் மூலமாகவே வாங்கி, என்எல்சி தனியார்மயமாகக் கூடாது என்பதில் முற்றுப்புள்ளி வைத்தார்" என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களின் நம்பிக்கை காக்கப்பட வேண்டும்:
விவசாயிகளின் தியாகத்தைக் குறிப்பிட்டுப் பேசிய எடப்பாடி பழனிசாமி, "நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் அமைக்கப்பட்ட போது, 'அரசுதான் இந்த நிறுவனத்தை நடத்தும்' என்ற முழு நம்பிக்கையோடு 23 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது விவசாய நிலங்களை வழங்கினார்கள். மக்களின் அந்த நம்பிக்கையை நிலைநிறுத்தும் வகையில், என்எல்சி தொடர்ந்து அரசுடைமை நிறுவனமாகவே நீடிப்பதை அதிமுக எப்போதும் உறுதி செய்யும்.
மத்திய அரசின் இந்தத் தனியார்மயமாக்கல் கொள்கை முடிவை எதிர்த்துப் போராடும் என்எல்சி ஊழியர் சங்கங்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் அதிமுக தனது முழு ஆதரவை வழங்கும்" என்று தெரிவித்துள்ளார்.
தவெக அரசுக்கு இபிஎஸ்-ஸின் முக்கிய வலியுறுத்தல்:
"வள்ளுவரின்,
‘ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம் கருதி இடத்தாற் செயின்’
என்ற குறளைப் பின்பற்றி, 2013-ல் ஜெயலலிதா எடுத்த சாதுரியமான முடிவால் தொழிலாளர்களின் நலன் காக்கப்பட்டது மட்டுமன்றி, இன்று தமிழக அரசிடம் இருக்கும் அந்தப் பங்குகளின் மதிப்பும் பல மடங்கு உயர்ந்துள்ளது.
அதேபோல், தற்போதைய தவெக அரசின் முதலமைச்சரும் உடனடியாகச் செயல்பட்டு, மத்திய அரசு என்எல்சி பங்குகளைத் தனியாருக்கு விற்பதைத் தடுக்க வேண்டும். ஜெயலலிதா செய்ததைப் போல, அந்த 3 சதவீத பங்குகளையும் தமிழ்நாடு அரசின் சார்பிலேயே வாங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலமே அங்கு பணிபுரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் நலனும், கடலூர் மாவட்ட மக்களின் எதிர்காலமும் பாதுகாப்பாக இருக்கும்" என்று எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் மிக அழுத்தமாக வற்புறுத்தியுள்ளார்.



AthibAn Tv