மணமகனிடம் ரூ.1 கோடி வாங்கி காதலனுக்கு கொடுத்த சியா கோயல்: புனே தொழிலதிபர் கொலை வழக்கில் போலீஸார் அதிரடி தகவல்!
புனே: மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவன அதிபரான கேத்தன் அகர்வால் (26) கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது வருங்கால மனைவி சியா கோயல் மற்றும் அவரது காதலன் சேத்தன் சவுத்ரி ஆகியோரின் திடுக்கிடும் சதித் திட்டங்களை புனே போலீஸார் விசாரணையில் வெளிப்படுத்தியுள்ளனர். சுமார் 600 கோடி ரூபாய் சொத்து மதிப்புள்ள குடும்பத்தைச் சேர்ந்த கேத்தனுக்கும், 20 வயதான சியா கோயலுக்கும் கடந்த பிப்ரவரி 11-ம் தேதி இருவீட்டார் சம்மதத்துடன் திருமண நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. வரும் நவம்பர் மாதம் ராஜஸ்தானின் உதய்பூரில் உள்ள அரண்மனை ஒன்றில், சுமார் 17 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த கொடூரக் கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக புனேவில் மளிகைக் கடை நடத்தி வரும் சேத்தன் சவுத்ரி (22) என்பவரை சியா கோயல் ரகசியமாகக் காதலித்து வந்துள்ளார். கேத்தனிடம் தனது காதலை மறைத்து பழகி வந்த சியா, காதலன் சேத்தனுடன் சேர்ந்து கேத்தனின் சொத்துக்களை அடையவும், அவரைத் தீர்த்துக்கட்டவும் திட்டமிட்டுள்ளார். இதற்காக, திருமண ஆடைகள் மற்றும் நகைகள் வாங்க வேண்டும் என்று கூறி, இந்த மாத தொடக்கத்தில் கேத்தனிடம் இருந்து சியா வலுகட்டாயமாக 1 கோடி ரூபாய் ரொக்கப் பணத்தைப் பெற்றுள்ளார். அந்தப் பெருந்தொகையைத் தனது காதலன் சேத்தனிடம் கொடுத்து, அவரது மளிகைத் தொழிலை விரிவுபடுத்தி அடுத்த 3 ஆண்டுகளில் பெரிய தொழிலதிபராக மாறவும், அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் சதித் திட்டம் தீட்டியுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தத் திட்டத்தின் இறுதிப் பகுதியாக, கடந்த 19-ம் தேதி தனது பிறந்தநாளை மகாபலீசுவர் நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கொண்டாட கேத்தன் ஏற்பாடு செய்திருந்த நிலையிலும், சியா அவரை வற்புறுத்தி லோகாகாட் கோட்டைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஏற்கனவே மே 31-ம் தேதி அங்கு சென்று கொலைக்கான ஒத்திகைகளையும் பார்த்திருந்த சியா, 3,389 அடி உயரமுள்ள மலை உச்சியிலிருந்து கேத்தனை கீழே தள்ளிக் கொலை செய்துள்ளார். பின்னர், கேத்தன் கால் தவறி 400 அடி பள்ளத்தில் விழுந்துவிட்டதாகச் சியா நாடகமாடிய நிலையில், போலீஸாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் காதலனுடன் சேர்ந்து செய்த இந்த கோரக் கொலைச் சதி அம்பலமாகியுள்ளது. தற்பொழுது இருவரையும் கைது செய்துள்ள போலீஸார் மேல் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

AthibAn Tv