கொடைக்கானல் மற்றும் ஊட்டிக்கு எத்தனை சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறித்த வழிகாட்டுதல் இன்று மாலை வெளியிடப்படுகிறது

கோடை வெயில் சுட்டெரிக்கிறது. பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக உள்ளது.
இந்நிலையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வனம் தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு டிவிஷன் பெஞ்ச் முன்பு கடந்த 29ம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “கோடை காலத்திலும், கொரோனா காலத்திலும் ஊட்டி, கொடைக்கானல் செல்லும் வாகனங்களுக்கு மே 7 முதல் ஜூன் 30ம் தேதி வரை இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும்.
இ-பாஸ் வழங்குவதற்கு முன் எத்தனை பேர் எந்த வகையான வாகனங்களில் வருகிறார்கள்? எத்தனை நாட்கள் தங்குவார்கள்? எங்கே தங்குவார்கள்? போன்ற விவரங்களை பெற்று சுற்றுலா தலங்களில் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து தெரிவிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதன்படி கொடைக்கானல், ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் இன்று மாலை வெளியிடப்படும். இ-பாஸ் நடைமுறைக்கு, எத்தனை வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன, உள்ளூர் வாகனங்களுக்கான நடைமுறைகள் என்ன? போன்ற விவரங்கள் வழிகாட்டுதல்களில் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.

AthibAn Tv