
பாகிஸ்தானின் கராச்சி பங்குச்சந்தை தாக்குதலில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக பாகிஸ்தானின் குற்றம்சாட்டி உள்ளது. அதற்கு 'நாங்கள் ஒன்றும் பாகிஸ்தான் போல் அல்ல' என இந்தியா தக்க பதிலடி தந்துள்ளது.
பாகிஸ்தானின் கராச்சியில், சண்ட்ரிகர் சாலையில், பங்குச்சந்தை அலுவலக வளாகம் அமைந்துள்ளது. இங்கு, நேற்று(ஜூன் 29) காலை, பங்குச்சந்தை வர்த்தக பணிகள், பரபரப்பாக நடைபெற்று வந்தன. அப்போது, பயங்கரவாதிகள் நான்கு பேர், அந்த வளாகத்திற்குள் காரில் வந்தனர். காரில் இருந்தபடியே, துப்பாக்கிச்சூடு நடத்தியதுடன், கையெறி குண்டுகளையும் வீசினர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள், எதிர் தாக்குதல் நடத்தினர். இதில், போலீஸ் எஸ்.ஐ., ஒருவர், நான்கு காவலர்கள் மற்றும் பொதுமக்கள் இருவர் பலியாயினர்; 7 பேர் காயமடைந்தனர்.தகவல் அறிந்து அங்கு வந்த, பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில், பயங்கரவாதிகள் நால்வரும் கொல்லப்பட்டனர்.
இத்தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியாவுக்கு தொடர்பு உள்ளது என பாகிஸ்தான் அபாண்ட குற்றச்சாட்டை இந்தியா மீது சுமத்தி உள்ளது. அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் மெக்மூத் குரேஷி கூறுகையில், 'இத்தாக்குதலில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளது; இந்தியாவின் ஸ்லீப்பர் செல்கள் தான் தாக்குதலுக்கு காரணம்' என குற்றம்சாட்டி உள்ளார்.
இந்தியா பதிலடி:
இதற்கு பதிலடி தரும் வகையில், இந்திய வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறுகையில்,
'பாகிஸ்தான், இந்தியா மீது வீண்பழி சுமத்துகிறது. உலகில் எங்கு பயங்கரவாத தாக்குதல் நடந்தாலும், அதை கண்டிக்கும் முதல் நாடாக இந்தியா இருக்கும். அல்கொய்தா பயங்கரவாத தலைவன் ஒசாமா பின்லேடனை, பாக்., பிரதமர் இம்ரான், தியாகி என கூறியதை குரேஷி மறந்துவிடக்கூடாது. இவ்வாறு அவர் பதிலடி தந்தார்.

AthibAn Tv