
ஈரானில் இருந்து சமுத்திர சேது ஆபரேசன் மூலம் ஐ.என்.எஸ் ஜலஸ்வா கடற்படை கப்பலில் 687 பேர் இன்று காலை தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகம் வந்தனர்.
கொரோனா பரவல் காரணமாக உலக நாடுகள் அமல்படுத்தியுள்ளன. இதனால், இந்தியர்கள் பலர் வெளிநாடுகளில் தவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தின் பல மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஈரானில் தங்கி ஒப்பந்த அடிப்படையில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டனர். ஊரடங்கு காரணமாக அவர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்தனர். அவர்களை சொந்த ஊருக்கு அழைத்து வர வேண்டும் என தமிழக அரசு மற்றும் பல கட்சி தலைவர்கள் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதேபோல், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் ஈரானில் சிக்கி தவித்து வந்தனர்.
இந்நிலையில், வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக சமுத்திர சேது என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்னர், மாலத்தீவில் இருந்து தமிழகத்தை சேர்ந்தவர்கள் அழைத்து வரப்பட்டனர். அதைபோல், சமுத்திர சேது திட்டத்தின் கீழ் ஈரானில் தவித்தவர்களை அழைத்து வர ஐ.என்.எஸ்., ஜலஸ்வா கடற்படை கப்பல் அங்கு விரைந்தது. அங்கிருந்து 687 பேரை அழைத்து கொண்டு, ஐஎன்எஸ் ஜலஸ்வா கப்பல், இன்று காலை தூத்துக்குடி துறைமுகம் வந்தனர்.

AthibAn Tv