இந்தியாவில், 4.58 கோடி பெண்கள் காணாமல் போயுள்ளதாக, ஐ.நா., அறிக்கை

Dina AthibAn
0
மதுக்கடைக்கு படையெடுத்த பெண்கள் ...

கடந்த, 50 ஆண்டுகளில், இந்தியாவில், 4.58 கோடி பெண்கள் காணாமல் போயுள்ளதாக, ஐ.நா., தெரிவித்துள்ளது.

சர்வதேச மக்கள் தொகை குறித்து, ஐ.நா., மக்கள் தொகை நிதியம், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: உலகளவில், 1970 - 2020 வரையிலான, 50 ஆண்டுகளில், காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை, இரு மடங்கு உயர்ந்து, 14.26 கோடியாக அதிகரித்துள்ளது. இது, 1970 நிலவரப்படி, 6.10 கோடியாக இருந்தது.

 உயர்வு:

பிரசவத்திற்கு முன், வயிற்றில் இருப்பது பெண் குழந்தை என, தெரியவந்தால், கருக்கலைப்பு செய்வது; பிரசவத்திற்குப் பின் இறக்கும் பெண் குழந்தைகள் ஆகியவையும், காணாமல் போன பெண்கள் பட்டியலில் இடம் பெறுவர். இந்த வகையில், இந்தியாவில், கடந்த, 50 ஆண்டுகளில், 4.58 கோடி பெண்கள், காணாமல் போயுள்ளனர். இது, சீனாவில், 7.23 கோடியாக உள்ளது.

கடந்த, 2013-17 வரை, இந்தியாவில், ஆண்டுக்கு, 4.6௦ லட்சம் பெண் குழந்தைகள் வீதம், பிறந்தவுடன் மாயமாகியுள்ளனர். இதில், மூன்றில் இரு பங்கினர், பாலினத் தேர்வாலும், ஒரு பங்கினர், பிறந்த பின்னரும் இறப்பை தழுவியுள்ளனர். உலகளவில், ஆண்டுக்கு, 12-13 லட்சம் பெண் சிசுக்கள், பாலின தேர்வு காரணமாக, பூமியில் பிறக்க முடியாமல், கருவிலேயே கலைக்கப்படுகின்றன. அதில், இந்தியா மற்றும் சீனாவின் பங்கு, 90-95 சதவீதம். அதே சமயம், இந்த இரு நாடுகளில் தான் பிறப்பு விகிதமும் அதிகம்.

ஆய்வாளர், அல்கெமா, 2014ல் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் தான், பெண் சிசுக்களின் இறப்பு அதிகம் என, குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு, ஆயிரம் பெண் குழந்தைகள் பிறந்தால், அதில், 13.5 குழந்தைகள் இறக்கின்றன. அதிலும், ஐந்து வயதிற்குட்பட்ட, ஒன்பது பெண் குழந்தைகள் இறந்தால், அதில் ஒரு குழந்தை, பிரசவத்திற்குப் பின், பாலின தேர்வு காரணமாக, உயிரிழக்கிறது.

பெண்கள் விகிதம் ஆண்களை விட குறைந்து வருவதால், திருமணத்திற்கு மணமகள் கிடைப்பது கடினமாகி வருகிறது. இந்தியாவில், 2055ல், 55 வயது வரை பெண் கிடைக்காமல், திருமணம் செய்ய முடியாத ஆண்களின் எண்ணிக்கை, 10 சதவீதமாக உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

கொடுமை:

பெண் விகிதாச்சாரம் குறைவதால், பால்ய திருமணங்கள் அதிகரிக்கும் ஆபத்தும் உள்ளது. தற்போது, 18 வயதிற்கு உட்பட்ட, 33 ஆயிரம் பெண்கள், வயது முதிர்ந்தோரை திருமணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக ஆய்வொன்று தெரிவிக்கிறது. இத்தகைய நெருக்கடி காரணமாகவும், பெண்கள் மாயமாவது அதிகரித்து வருகிறது. சமூகத்தில் பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வு பரவலாக வேண்டும். பெண்களுக்கு, கல்வி, திறன் பயிற்சி வசதிகளை அதிகரிக்க வேண்டும். இதன் மூலம், அடுத்த, 10 ஆண்டுகளில், பெண் குழந்தை திருமணங்களை தடுக்கலாம்.

ஆப்ரிக்காவில் காணப்படும் பெண் பிறப்புறுப்பு சிதைவு பழக்கங்களுக்கு முடிவு கட்டலாம். கொரோனா பரவலால், பெண்கள் விழிப்புணர்வு மற்றும் சேவை நிகழ்ச்சிகள், ஆறு மாதங்கள் நிறுத்தப்பட்டால், மேலும், 1.30 கோடி பெண்கள், கட்டாய திருமணத்திற்கு ஆளாக நேரும். அத்துடன், 2030க்குள் மேலும், 20 லட்சம் பெண்கள், பிறப்புறுப்பு சிதைவு கொடுமையை சந்திக்க நேரிடும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!