
வட மாநிலங்களில் வயல்வெளிகளில் கூட்டம் கூட்டமாக இடம்பெயர்ந்து பயிர்களை அழித்து வந்த வெட்டிக்கிளிகள் திரள் தற்போது தலைநகர் டில்லி மற்றும் குருகிராம் நகரங்களில் நுழைந்துள்ளது.
ஈரான், பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்த பாலைவன வெட்டுக்கிளிகள் ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் அரியானா மாநிலங்களில் விளை நிலங்களை சேதப்படுத்தின. தற்போது இவை மஹாராஷ்டிரா, பஞ்சாப், உ.பி மாநிலங்களில் திரளாக இடம்பெயர்ந்து பயிர்களை நாசமாக்கி வருகின்றன. மத்திய, மாநில அரசு மற்றும் விவசாயிகள் இதனை கட்டுப்படுத்த கூட்டு முயற்சியில் ஈடுபட்டும் பெரிதாக பலனில்லை.
இந்த நிலையில் கிராம வயல்வெளிகளில் சுற்றித் திரிந்த இவைகள் நகரங்களுக்குள் நுழைந்துள்ளன. டில்லிக்கு அருகிலுள்ள குருகிராமில் இன்று காலை 11 மணி வாக்கில் வெட்டுக்கிளிகள் கூட்டம் வானை மறைக்கும் அளவுக்கு பறந்ததாக குடியிருப்புவாசிகள் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து குருகிராம் மாவட்ட நிர்வாகம் டிராக்டர் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. ஜன்னல் கதவுகளை மூடியே வைத்திருக்கும்படியும், வெட்டுக்கிளிகள் கூட்டம் தென்பட்டால் பாத்திரங்களை தட்டி விரட்டும் படியும் அறிவுறுத்தியுள்ளது.
குருகிராமில் வெட்டுக்கிளி தாக்குதலைத் தொடர்ந்து, நிலைமை குறித்து விவாதிக்க டில்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் அவசரக் கூட்டத்தை நடத்தி எச்சரிக்கையாக இருக்குமாறு உத்தரவிட்டார். விமான நிலையத்திற்கு அருகில் உள்ள குருகிராம்-துவாரகா நெடுஞ்சாலை பகுதிகளில் வெட்டுக்கிளி திரள்கள் காணப்படுவதால், விமானத்தை தரையிறக்கும் போதும், புறப்படும் போதும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு டில்லி விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு மையம் அனைத்து விமானிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.


AthibAn Tv