
சிவசேனாவின், உத்தவ் தாக்கரே, மஹாராஷ்டிராவில் கட்சியை ஆட்சிக்கு கொண்டு வர படாதபாடு பட்டு, முதல்வராகவும் பொறுப்பேற்றார். காங்கிரசை எதிர்த்து, பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற சிவசேனா, இப்போது காங்., - தேசியவாத காங்கிரசோடு கைகோர்த்து ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது.
தேசியவாத காங்., தலைவர் சரத் பவார், அடிக்கடி உத்தவ் தாக்கரேவை சந்தித்து, பல ஆலோசனைகளை வழங்கி வருகிறார். பவார் எந்த அரசு பதவியில் இல்லாவிட்டாலும், ஆட்சியில் இவரின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. சமீபத்தில், மஹாராஷ்டிராவை புயல் தாக்கியது. உடனே, சரத் பவார் வழக்கம் போல, முதல்வர் உத்தவ் தாக்கரேவை சந்தித்து, 'என்ன செய்ய வேண்டும்; எப்படி செயல்பட வேண்டும்' என, பல ஆலோசனைகளை கூறினார்.
வழக்கமாக இப்படிப்பட்ட விவகாரங்களை, அமைச்சரவை தான் அலசும்.இதன் பின், பல உத்தரவுகளை பிறப்பித்தார் முதல்வர் உத்தவ் தாக்கரே. தன் கட்சியினருக்கு, 'புயல் நிவாரண பணிகளில் உடனடியாக செயல்பட வேண்டும்' என, உத்தரவிட்டார் பவார். இது, சிவசேனா கட்சிக்குள் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் பதவியில் இருப்பது, உத்தவா அல்லது பவாரா என, பட்டிமன்றமே நடைபெறுகிறது.


AthibAn Tv