
'சி.ஐ.எஸ்.சி.இ.,யின், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவ - மாணவியர், பாக்கி வைத்திருக்கும் தேர்வுகளை எழுதுவதா, வேண்டாமா என்பதை, அவர்களே முடிவு செய்து கொள்ளலாம்' என, சி.ஐ.எஸ்.சி.இ., நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, நாடு முழுதும், பள்ளிகள், கல்லுாரிகள் என, அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், சி.ஐ.எஸ்.சி.இ., எனப்படும், இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் கவுன்சிலிங், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, நிலுவையில் உள்ள தேர்வுகள், ஜூலை, 1 முதல், 14ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.
அந்தத் தேர்வுகளை ரத்து செய்ய உத்தரவிடுமாறு, மும்பை உயர் நீதிமன்றத்தில், பெற்றோர் தரப்பில், சமீபத்தில் முறையிடப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை, நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் வந்தது. அப்போது, இந்த மனு தொடர்பாக பதிலளித்து, சி.ஐ.எஸ்.சி.இ., கல்வி வாரியம், உயர் நீதிமன்றத்தில் பரிந்துரை ஒன்றை முன்வைத்தது.
அதில், கூறப்பட்டுள்ளதாவது: சி.ஐ.எஸ்.சி.இ.,யின் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவ - மாணவியர், நிலுவையில் உள்ள தேர்வுகளை எழுதுவதா, வேண்டாமா என்பது குறித்து அவர்களே முடிவு செய்யலாம். மாணவர்கள், தங்கள் முடிவுகளை அந்தந்த பள்ளிகளில், வரும், 22ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்.
அப்படி தேர்வு எழுதாத மாணவர்கள், பள்ளி தேர்வுகளில் இதுவரை பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி செய்யப்படுவர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


AthibAn Tv