
தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதால் தென்மாவட்டங்களில் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் சீசனும் துவங்கியது.
ஆண்டுதோறும் ஜூனில் துவங்கும் தென்மேற்கு பருவமழையினால் தென்காசி மாவட்டத்தில் குற்றாலம், செங்கோட்டை மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம், மணிமுத்தாறு, களக்காடு என மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்யும். குற்றால அருவிகளில் நீர்வரத்தினால் சீசன் களைகட்டும். திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்தது. இன்று மழையில்லை. இருப்பினும் வெயில் அதிகமின்றி குளுகுளு சீசன் துவங்கியுள்ளது.
மணிமுத்தாறு அணைக்கு மேலே உள்ள மாஞ்சோலை, குதிரைவெட்டி, காக்காச்சி, ஊத்து தேயிலை தோட்டங்களில் இன்று மழை பெய்தது. மழை மேகங்கள் தவழ சீசன் ரம்மியமாக இருந்தது. குற்றாலம் மெயின்அருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் விழத்துவங்கியுள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் குற்றாலம் சீசன் களைகட்டத் துவுங்கிவிடும். இருப்பினும் தற்போது கொரோனா ஊரடங்கினால் பயணிகள், அருவிகளுக்கு செல்ல தடை உள்ளது. விரைவில் அருவிகளில் குளிப்பது குறித்தும் அரசு அறிவிப்பு வெளியிடும் என பயணிகள், வியாபாரிகளிடையே எதிர்பார்ப்பு உள்ளது.

AthibAn Tv