
கொரோனா பீதியால், பல நாடுகள், கப்பல்கள் துறைமுகத்திற்கு வர தடை விதித்துள்ளதால், அவற்றில் உள்ள 40 ஆயிரத்திற்கும் அதிகமான பணியாளர்கள், நடுக் கடலில் தவித்து வருகின்றனர்.
கொரோனா பரவலைத் தடுக்க, உலக நாடுகள், மார்ச் துவக்கத்தில் ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பித்தன. இதனால், மூன்று மாதங்களுக்கும் மேலாக, ஏராளமான கப்பல்கள், துறைமுகத்திற்கு வர முடியாமல், நடுக்கடலில் நங்கூரமிட்டு, அனுமதிக்காக காத்திருக்கின்றன. மேலும், கப்பல்களில் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உதாரணமாக, ஜப்பான் அருகே நிறுத்தப்பட்டிருந்த, 'டைமண்ட் பிரின்சஸ்' சொகுசு கப்பலில், 600க்கும் அதிகமானோர் கொரோனா தாக்குதலுக்கு ஆளாயினர். அவர்களில், 14 பேர் பலியாகினர்.
சில கப்பல் பணியாளர்களை, அவர்கள் சார்ந்த நாடுகள் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றன. இம்மாத துவக்கத்தில், 'கார்னிவல் க்டூஸ் லைன்' கப்பல் பணியாளர்கள், 3,000 பேர், குரோஷியா வழியாக, தாங்கள் வசிக்கும் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றனர்.எம்.எஸ்.சி., க்டூஸ் கப்பல் நிறுவனம், ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்க கடல் பகுதியில் சிக்கியிருந்த, ஆயிரத்திற்கும் அதிகமானோரை, சிறிய விமானங்கள் மூலம், இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது.
'ராயல் கரீபியன்' நிறுவனம், கிரீஸ், துபாய், அமெரிக்கா, பார்படாஸ் நாடுகளின் கடல் பகுதியில் தவித்து வந்த, 1,200க்கும் அதிகமானோரை, பிலிப்பைன்சுக்கு அனுப்பி வைத்தது. கரீபியன் நாடுகளில், பார்படாஸ் மட்டுமே, கடலில் தவிக்கும் கப்பல் பணியாளர்களை மீட்பதற்காக, விமான சேவைக்கு அனுமதி அளித்துள்ளது.


AthibAn Tv