
கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியாவின் மே மாத ஏற்றுமதி 36.5 சதவீதமும், இறக்குமதி 51 சதவீதமும் குறைந்ததால், வர்த்தக பற்றாக்குறை 3.1 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
மத்திய வர்த்தக துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-ஏப்ரல் மாதத்தில் வர்த்தக ஏற்றுமதி 60.3 சதவீதமும், இறக்குமதி 58.7 சதவீதமும் சரிவை சந்தித்தன. மே மாதத்தில், அரிசி, மருந்து பொருட்கள், மசாலா, இரும்பு தாது உள்ளிட்ட முக்கியமான பொருட்களின் ஏற்றுமதி மட்டுமே அதிகரித்திருந்தன. இறக்குமதியை பொறுத்தவரை இரும்பு தாது மூலப்பொருள், பொறியியல் பொருட்கள் வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. மே மாத ஏற்றுமதி 36.5 % (19.5 பில்லியன் டாலர்) குறைந்தது. இறக்குமதி 51.05 % (22.20 பில்லியன் டாலர்) குறைந்துள்ளது.
ஏற்கனவே பொருளாதார மந்தநிலையில் இருந்த இந்திய வர்த்தகம், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கால் மேலும் பாதிப்பை சந்தித்துள்ளது.கொரோனா தொற்று காரணமாக 2020ம் ஆண்டில் சர்வதேச அளவில் வர்த்தகம் 13 % முதல் 32 % வரை வீழ்ச்சியை சந்திக்குமென உலக வர்த்தக அமைப்பு கணித்துள்ளது.
முன்னெப்போதும் சந்தித்திராத சுகாதார நெருக்கடிமிக்க சூழல் மற்றும் நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றால் பொருளாதார தாக்கத்தை கணிக்கப்பட்ட அளவுக்கு சந்திக்க வாய்ப்புள்ளது. மேலும் இது 2008-09, ஆண்டில் ஏற்பட்ட உலகளாவிய நிதி நெருக்கடியால் ஏற்பட்ட வர்த்தக சரிவை விட அதிகமாக இருக்குமென ஏப்ரலில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தது.


AthibAn Tv