
மத்திய அரசின் நீர்வளத்துறை திட்டமான தமிழகத்தின் முதல் நதிநீர் இணைப்பு திட்டப்பணிகள் முடுக்கவிடப்பட்டுள்ளன. 2021 மார்ச்சுக்குள் திட்டம் செயல்பாட்டுக்குள் வருகிறது.
மத்திய நீர்வளத்துறையின் கனவு திட்டம் ;
மத்திய அரசின் நீர்வளத்துறை மற்றும் ஆறுகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் திட்டம் 2009ல் துவக்கப்பட்டது. மழைக்காலங்களில் தாமிரபரணியில் வீணாகி கடலில் கலக்கும் 13 ஆயிரத்து 800 மில்லியன் கனஅடி நீரை திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களின் வறட்சி பகுதிகளுக்கு கால்வாய் மூலம் திருப்பிவிடும் திட்டமாகும். 2009ல் ரூ 369 கோடி மொத்த மதிப்பீட்டில் திட்டம் துவக்கப்பட்டது.
அம்பாசமுத்திரம் அருகே வெள்ளங்குழியில் தாமிரபரணி ஆற்றின். கன்னடியன் கால்வாயில் இருந்து புதிய கால்வாய் தோண்டப்பட்டது. மொத்தம் 75 கி.மீ.,துாரம் கால்வாய் பணிகள் நான்கு கட்டங்களாக பிரிக்கப்பட்டது. வெள்ளங்குழியில் இருந்து பச்சையாறு வரையிலும் முதற்கட்ட பணிகளும், அங்கிருந்து மூலைக்கரைப்பட்டி வரையிலும் இரண்டாம் கட்ட பணிகளும் 2011 வரை நடந்தது. 2011 ஆட்சி மாற்றத்திற்கு பிறகு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இதனால் திட்ட மதிப்பீடு 872 கோடி ரூபாய்க்கு உயர்ந்தது. 2019 பிப்.,19ல் முதல்வர் பழனிச்சாமி, இந்த திட்டத்தின் மூன்றாம் கட்ட பணிகளை துவக்கிவைத்தார்.
160 கோடி ஒதுக்கீடு
16 மாதங்களில் காரியாண்டி முதல் நம்பியாறு வரையிலும் மூன்றாம்கட்ட பணிகளில் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இதனிடையே கொரோனா காலத்திலும் தாமிரபரணி வெள்ளநீர் திட்ட பணிகள் தடைபடக்கூடாது என்பதற்காக நான்காம் கட்ட பணிகளுக்காக தமிழக அரசு 160 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இம்மாதம் இறுதியில் டெண்டர் விடப்பட்டு காரியாண்டி முதல் எம்.எல்.தேரி வரையிலும் 21 கி.மி.,துார கால்வாய் தோண்டும் பணிகள் துவங்குகிறது.
நம்பியாறு அருகே கோவன்குளத்தில், 3வது கட்ட திட்டப்பணிகளை ஆய்வு செய்த ராதாபுரம் எம்.எல்.ஏ.,இன்பதுரை கூறுகையில், தென் மாவட்டங்களுக்கு வரப்பிரசாதமான இத்திட்டத்தை சாத்தான்குளம் இடைத்தேர்தலின்போது முதல்வர் ஜெ.,அறிவித்தார். 2014ல் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதியிடம் அனுமதி பெற்றார். இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரும்போது, திருநெல்வேலி மாவட்டத்தில் 33 ஆயிரத்து 300 ஏக்கர் நிலமும், துாத்துக்குடி மாவட்டத்தில் 23 ஆயிரத்து 620 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறும். மொத்தம் 50 கிராமங்கள் செழிப்படையும். சாத்தான்குளத்தில் இரண்டு டிஎம்சி நீர் தேக்கும் குளம் அமையும். திட்டத்தின் நான்காவது பகுதிக்கு தற்போது ரூ 160 கோடி நிதி ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்பட உள்ளது. 2021 மார்ச்க்குள் திட்டப்பணிகளை நிறைவு செய்வோம் என்றார்.
தாமிரபரணி வெள்ளநீர் திட்ட கண்காணிப்பு பொறியாளர் ஞானசேகர் கூறுகையில், மத்திய அரசின் நீர்வளத்துறை திட்டத்தை மாநில அரசின் நிதியில் மேற்கொண்டுவருகிறது. 50 சதவீதபணிகள் நிறைவடைந்தாலே மத்திய அரசிடம் நிதி கேட்கலாம் என உள்ளது. மத்திய அரசு தாமிரபரணி திட்டத்திற்கு நிதிஒதுக்கும் நிலையில் கொரோனா பாதிப்பில் நிறுத்தப்பட்டது. இருப்பினும் தமிழக அரசு நிதியில் திட்டத்தை 2021 மார்ச்க்குள் நிறைவு செய்வோம். தமிழகத்தின் முதல் நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு மத்திய அரசு முழுமையான நிதியை வழங்கிவிடும் என்றார்.


AthibAn Tv