"காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு மீது அவமதிப்பு வழக்கு தொடர்க" - முதல்வர் விஜய்க்கு டிடிவி தினகரன் கோரிக்கை!
சென்னை: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகக் காவிரியில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டிருக்கும் கர்நாடக அரசு மீது உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்றும், இவற்றுடன் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் விஜயை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டுவதற்கான அளவீட்டுப் பணிகளைத் தொடங்கியிருப்பதோடு, அப்பகுதிகளில் சட்டவிரோத கட்டுமானப் பணிகளையும் கர்நாடக அரசு மேற்கொண்டிருப்பதாக அங்கு நேரடியாகப் பார்வையிட்டு ஆய்வு செய்த தமிழக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கும் எதிராகச் செயல்படுவதோடு, தமிழகத்திற்குத் தர வேண்டிய உரிய நீரை உரிய நேரத்தில் தரத் தொடர்ந்து மறுத்து வரும் கர்நாடக காங்கிரஸ் அரசாங்கம், தற்போது மேற்கொண்டிருக்கும் இந்த கட்டுமானப் பணிகளின் மூலம் மேகேதாட்டு அணையைக் கட்டும் முடிவில் இருந்து துளியளவும் பின்வாங்கப் போவதில்லை என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டியுள்ளது என்று அவர் சாடியுள்ளார். மேகேதாட்டு அணை கட்டுவதற்கான எந்தவொரு அனுமதியையும் கர்நாடக அரசுக்கு வழங்கக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்தித் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் தற்போதைய நிலை என்னவென்று தெரியாத நிலையில், கர்நாடக அரசு காட்டும் இத்தீவிரம் தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் தினகரன் தெரிவித்துள்ளார்.
மேலும், "மேகேதாட்டுவில் ஒரு செங்கல்லைக் கூட வைக்க விடமாட்டோம் எனத் தமிழக காங்கிரஸ் கட்சியினர் இங்கு வெற்று வாய்ச் சவடால் விட்டுக் கொண்டிருக்கும் அதேவேளையில், மேகேதாட்டு பகுதிகளில் கர்நாடக காங்கிரஸ் அரசாங்கம் கட்டுமானப் பணிகளைத் தொடங்கியிருப்பதன் மூலம் காவிரி விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியை நம்பி எந்தவித பயனும் இல்லை என்பதை முதலமைச்சர் விஜய் இனியாவது உணர வேண்டும்" என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, தமிழகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறும் கர்நாடக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வதுடன், பிரதமரைச் சந்தித்துத் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட முதலமைச்சர் விஜய் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

AthibAn Tv