"பொது இடங்களில் விலங்குகளை வெட்ட சென்னை ஐகோர்ட் விதித்த தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!"
புதுடெல்லி:
பொது இடங்களில் கால்நடைகள் மற்றும் விலங்குகளை வெட்டுவதற்குச் சென்னை உயர் நீதிமன்றம் விதித்த அதிரடி தடை உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் (Supreme Court) மேல்முறையீடு செய்துள்ளது. மனுதாரர் கோராத கோரிக்கைகளையும், எழுப்பாத பிரச்சினைகளையும் விவாதித்து சென்னை உயர் நீதிமன்றம் இந்தத் தடையைப் பிறப்பித்துள்ளதாகத் தமிழக அரசு தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்து மக்கள் கட்சியின் இளைஞரணி செயலாளரான கோவையைச் சேர்ந்த சூர்ய பிரசாந்த் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், "பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கோவையின் பல்வேறு பொது இடங்களில் மாடுகள் வெட்டப்பட உள்ளதால், அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தாண்டி பொது இடங்களில் மாடுகளை வெட்டக் கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, கடந்த மே 27-ம் தேதி ஒரு அதிரடி உத்தரவைப் பிறப்பித்தது.
அதில், "பக்ரீத் பண்டிகை மட்டுமன்றி மற்ற நாட்களிலும் தமிழகம் முழுவதும் அனுமதிக்கப்பட்ட இறைச்சிக் கூடங்களைத் தவிர, பொது இடங்களில் எந்தவொரு விலங்கினங்களையும் வெட்டக் கூடாது; இதனைத் தமிழக அரசின் தலைமைச் செயலாளரும், சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபியும் உறுதி செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டிருந்தனர்.
"சட்டம் முறைப்படுத்தவே... தடை செய்ய அல்ல" - தமிழக அரசு வாதம்:
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, தமிழ்நாடு அரசின் சார்பில் வழக்கறிஞர் ஜெய் நரசிம்மன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
கோராத கோரிக்கை: சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கோரப்படாத ஒரு கோரிக்கையை, நீதிமன்றம் தானாக முன்வந்து தமிழகம் முழுவதும் பொது இடங்களில் மாடுகள் மற்றும் விலங்குகளை வெட்டுவதற்கான தடையாகப் பிறப்பித்துள்ளது.
சட்டத்தின் நோக்கம்: தமிழ்நாடு விலங்குகள் பாதுகாப்புச் சட்டம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் ஆகியவை விலங்குகளைப் பலியிடுவதையும், இறைச்சிக்காக வெட்டுவதையும் முறைப்படுத்துவதற்காக (Regulate) உருவாக்கப்பட்டவையே தவிர, அவற்றை முழுமையாகத் தடை செய்வதற்காக (Prohibit) உருவாக்கப்பட்டவை அல்ல.
எனவே, நடைமுறைச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் எனத் தமிழக அரசு கோரியுள்ளது.
சூர்ய பிரசாந்த் தரப்பில் 'கேவியட்' மனு தாக்கல்:
இதற்கிடையே, இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யும்போது, தங்கள் தரப்பு நியாயங்களையும் கேட்டறிந்த பின்னரே உச்ச நீதிமன்றம் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, வழக்கறிஞர் பி.வி.யோகேஸ்வரன் மூலம் மனுதாரர் சூர்ய பிரசாந்த் தரப்பில் 'கேவியட்' (Caveat) மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும்போது இருதரப்பிலும் காரசாரமான வாதங்கள் அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


AthibAn Tv