“குதிரை பேரத்தில் ஈடுபடும் முதல்வர் விஜய் மீது நடவடிக்கை தேவை” - ஆளுநருக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு கடிதம்!
சென்னை: தமிழக அரசியல் களத்தில் நாளுக்கு நாள் பரபரப்பு உச்சக்கட்டத்தை எட்டி வரும் வேளையில், “தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் நேரடியாகக் குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார்; எனவே அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தித் தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகருக்கு திமுக சார்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அதிரடியாகக் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதிமுகவிலிருந்து அடுத்தடுத்து எம்.எல்.ஏ-க்களும், முன்னாள் அமைச்சர்களும் தவெகவில் இணைந்து வரும் சூழலில், திமுக ஆளுநரிடம் இந்த நச்சுக்கடிதத்தை அளித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
மதிமுக வைகோவின் பேச்சால் அம்பலமான கூட்டுச்சதி?
ஆளுநருக்கு திமுக சார்பில் அனுப்பப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
ஆளுநருக்கு திமுக எழுதிய கடித விபரம்: "கடந்த 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.எம்.ராஜேந்திரன் மற்றும் சீர்காழி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் செல்வன் ஆகிய இருவரும் திராவிட முன்னேற்றக் கழக (திமுக) வேட்பாளர்களாக, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டுத் தங்களது வெற்றியைப் பதிவு செய்தனர்.
தற்போது ஆளும் தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்குப் போதிய பெரும்பான்மை பலம் இல்லாததால், எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில் அவர்கள் இருவரையும் பதவியிலிருந்து விலகச் செய்ய, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக (மதிமுக) பொதுச் செயலாளர் வைகோவுடன் இணைந்து முதல்வர் ச.ஜோசப் விஜய் ஒரு கூட்டுச் சதியில் ஈடுபட்டுள்ளார். இந்த விவகாரத்தை வைகோவே அண்மையில் வெளிப்படையாகத் தெரிவித்து அம்பலப்படுத்தியுள்ளார்."
ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணைக்கு உத்தரவிடக் கோரிக்கை
மேலும், இத்தகைய ஜனநாயகப் படுகொலையான குதிரை பேரத்தில் (Horse-trading) மாநிலத்தின் முதல்வரே நேரடியாகப் பங்கேற்றுப் பேரம் பேசியுள்ளதால், அவர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு (DVAC) ஆளுநர் உத்தரவிட வேண்டும் என ஆர்.எஸ்.பாரதி தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
அதுமட்டுமன்றி, ஏற்கனவே அதிமுக-வைச் சேர்ந்த 6 சட்டமன்ற உறுப்பினர்களைக் குதிரை பேரம் மற்றும் பல்வேறு ஆசை வார்த்தைகள் மூலமாகத் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வைத்து, தவெகவில் முதல்வர் விஜய் இணைத்துள்ளார் என்றும் திமுக ஆளுநரிடம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைப் பட்டியலிட்டுள்ளது.
பின்னணி என்ன? - வைகோவின் அந்தப் பேச்சு:
முன்னதாக நடைபெற்ற மதிமுக பொதுக்குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஒரு முக்கியத் தகவலைப் பகிர்ந்திருந்தார்.
அதில், "எங்களது இரண்டு எம்.எல்.ஏ-க்களும் (உதயசூரியன் சின்னத்தில் வென்றவர்கள்) தங்களது பதவிகளை ராஜினாமா செய்தால், அவர்களுக்கு ஆதரவாக வரவிருக்கும் இடைத்தேர்தலில் நானே நேரடியாக வந்து பிரச்சாரம் செய்வேன் என முதல்வர் விஜய் கூறியிருந்தார். ஆனால், நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடப் போவதில்லை" என்று வைகோ குறிப்பிட்டிருந்தார்.
வைகோவின் இந்த அதிரடி வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்தே, தவெக அரசுக்குக் குடைச்சல் கொடுக்கும் வகையில் திமுக தற்போது ஆளுநர் மாளிகையின் கதவுகளைத் தட்டியுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக அரசுக்கு ஆதரவை நீட்டித்துள்ள வேளையில், திமுகவின் இந்த அடுத்தகட்ட மூவ் தமிழக அரசியலை மேலும் சூடாக்கியுள்ளது.

AthibAn Tv