“திமுக மீது பெ.சண்முகம் கடும் விமர்சனம்!”: எம்.எல்.ஏ பேரம் பேசப்பட்ட விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விளாசல்
கோவை: தமிழக அரசியலில் நிலவி வரும் பரபரப்பான சூழலுக்கு மத்தியில், திமுகவின் செயல்பாடுகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் விரைவில் தேர்தல் வரும் என்றும், ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்பு பேசியதன் பின்னணி இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகக் குறிப்பிட்டார். திமுகவால் ஆட்சி அதிகாரத்தில் இல்லாமல் இருப்பதை சகித்துக் கொள்ள முடியவில்லை என்றும், மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்க மறுத்து, தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சியை எப்படியாவது கவிழ்க்க வேண்டும் என்ற நோக்கில் ‘குதிரை பேரம்’, ‘கழுதை பேரம்’ போன்ற ஜனநாயக விரோதச் செயல்களில் அக்கட்சியினர் ஈடுபட்டு வருவதாக அவர் சாடினார். சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விலைபேசி வாங்கும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது, திமுகவின் தீவிரமான பின்னணித் திட்டத்தையே காட்டுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
எம்.எல்.ஏ-க்கள் தாமாக முன்வந்து கட்சி மாறுவது இயல்பானது என்றாலும், பணத்தைக் கொடுத்து விலை பேசுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனத் தெரிவித்த பெ.சண்முகம், இதில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அரசு அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தொடர்ந்து தவெகவில் இணைவது ஒரு ஆரோக்கியமற்ற அரசியல் சூழல் என்று குறிப்பிட்ட அவர், இதுகுறித்து தவெக தலைமையிடம் தனது அதிருப்தியைப் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளதாகவும் கூறினார். “வேறு ஒரு கட்சியில் புகலிடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் அதிமுகவினர் ராஜினாமா செய்கிறார்கள், அப்படிப்பட்டவர்களை தவெக ஏன் சேர்க்க வேண்டும்?” என்ற கேள்வியை எழுப்பிய அவர், இடதுசாரிகளைத் தவிர மற்ற கட்சியினர் ஆளுங்கட்சியை நோக்கி மாறுவது இதற்கு முன்பும் நடந்துள்ளது என்றும், ஆனால் இத்தகைய மிரட்டல் மற்றும் பேர அரசியலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் தனது உறுதியான எதிர்ப்புக் கொள்கையில் நிலைத்து நிற்கும் என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.


AthibAn Tv