"மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு" - அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் உருக்கம்: எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பிய கடித விவரம்!
சென்னை: தமிழக அரசியல் களம் தவெக ஆட்சியின் கீழ் புதிய பரிமாணத்தை எட்டியுள்ள சூழலில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிற்குப் புதிய பலத்த அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் முக்கியப் பேச்சாளரும், முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான வைகைச்செல்வன் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அதிரடியாக விலகியுள்ளார். "மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு என்பதை நான் இந்த இயக்கத்தில் உணர்ந்து கொண்டேன்" என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் அனுப்பியுள்ள விலகல் கடிதத்தில் மிக உருக்கமாகவும் காரசாரமாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வைகைச்செல்வன் அனுப்பியுள்ள அக்கடிதத்தின் முழு விவரம்: "நான் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் முழுமையாக விலகிக்கொள்கிறேன். ஒரு உண்மையான தலைவன், தான் அழிந்தால்கூட தனது கொள்கைகளும், தான் சார்ந்த இயக்கமும் வெற்றிபெற வேண்டும் என்றுதான் நினைப்பார். ஆனால், இயக்கமும் அதை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொண்டர்களும் அழிந்தால்கூட, தான் மட்டும் சுயநலத்தோடு நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒருபோதும் நல்ல தலைவராக இருக்க முடியாது" என்று எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாகச் சாடியுள்ளார்.
மேலும், அதிமுகவின் தற்போதைய அரசியல் நிலைப்பாடு குறித்துக் கடிதத்தில் அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்துள்ள அவர், "திமுகவோடு இணைந்து ஆட்சியமைக்கத் திட்டமிட்டதன் மூலம், கட்சியின் பிரதான கொள்கையான 'திமுக எதிர்ப்பு' என்ற நிலையில் இருந்து அதிமுக முற்றிலும் சமரசப் போக்கிற்குச் சென்றுவிட்டது. இதனால், கட்சி தனக்கே உரிய தனித்துவமான அடையாளத்தை இழந்துவிட்டதுடன், வெற்றிப் பாதையில் இருந்தும் வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டது. கடந்த தேர்தல் களத்தில் நான் முற்றிலும் தனித்து விடப்பட்ட நிலையில்கூட, கட்சியின் நலனுக்காகத் தொடர்ந்து தீவிர தேர்தல் பரப்புரையாற்றினேன். ஆனால், அதற்குப் பரிசாக எனக்குக் கிடைத்தது புறக்கணிப்பு மட்டுமே. மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு என்பதை நான் இப்போது ஆழமாக உணர்ந்து கொண்டேன். எனது மாணவப் பருவம் தொட்டு ரத்தமும் சதையுமாக இருந்து வளர்த்த இந்த இயக்கத்தை விட்டு தற்போது விலகுவதை எண்ணிப் பார்க்கும்போது, என் மனதில் ஏற்படும் கடுமையான வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை" என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுகவில் தொடரும் சரிவு: தமிழகத்தில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னணி தலைவர்கள் அடுத்தடுத்து கட்சியை விட்டு விலகி வருவது எடப்பாடி பழனிசாமிக்குத் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அதிமுகவைச் சேர்ந்த 6 சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) தங்களது பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர்.
அதேபோல், முன்னாள் அமைச்சர்களான வெல்லமண்டி நடராஜன், கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் சில மாவட்டச் செயலாளர்களும் அதிமுகவிலிருந்து விலகி தவெக பாசறையில் ஐக்கியமாகியுள்ளனர். வைகைச்செல்வன் உட்பட கட்சியை விட்டு வெளியேறும் அனைத்து மூத்த தலைவர்களுமே அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் ஒற்றைத் தலைமை மற்றும் செயல்பாடுகளையே இதற்குக் முதன்மைக் காரணமாகக் குற்றம்சாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடர் சரிவு அதிமுக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


AthibAn Tv