கோவளத்தில் இன்று தவெக தோழமை கட்சிகள் ஆலோசனைக் கூட்டம்: முதல்வர் விஜய் தலைமை தாங்குகிறார்!
சென்னை: தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தோழமை கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று (ஜூலை 1) மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக கூட்டணி அரசு அமைத்த பிறகு நடைபெறும் முதல் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இது என்பதால், அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தேர்தல் வெற்றிக்குப் பிந்தைய முதல் நகர்வு
சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் அபார வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது தமிழக வெற்றிக் கழகம். தொடர்ந்து காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக), கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) ஆகிய கட்சிகளின் ஆதரவோடு தமிழகத்தில் தவெக ஆட்சி அமைத்தது. இந்தச் சூழலில், தனக்கு ஆதரவளித்து ஆட்சி அமைக்க உதவிய தோழமை கட்சிகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து விரிவாக விவாதிப்பதற்காகவும் முதல்வர் விஜய் இந்த கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.
மதிமுக-வுக்கு அழைப்பு; தலைவர்கள் நேரில் சந்திப்பு
இக்கூட்டத்தில் பங்கேற்க வருமாறு தோழமை கட்சித் தலைவர்களுக்கு தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளனர். குறிப்பாக, சமீபத்தில் திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெக அரசுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் (மதிமுக) இக்கூட்டத்தில் பங்கேற்க விசேஷ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலை எதிர்கொள்வது மற்றும் தோழமை கட்சிகளை ஒருங்கிணைத்து ஒன்றாகக் கொண்டு செல்வது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்க மறுப்பு: காரணம் என்ன?
மறுபுறம், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்காது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் நிர்வாகிகள் தரப்பில் கூறும்போது, "நாங்கள் தவெக அரசுக்கு வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு அளிக்கிறோம். நாங்கள் கூட்டணியிலோ அல்லது அமைச்சரவையிலோ இடம் பெறவில்லை. எனவே, தவெக நடத்தும் கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் நாங்கள் கலந்து கொள்ளப் போவதில்லை. எனினும், தவெக அரசுக்கான எங்களது ஆதரவு தொடர்ந்து நீடிக்கும்" என்று விளக்கமளித்துள்ளனர். இதுதொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் இன்று காலை முதல்வர் விஜயைச் சந்தித்து தங்கள் நிலைப்பாட்டை நேரில் விளக்குவார்கள் என்றும் கூறப்படுகிறது.


AthibAn Tv