ரூ.3.23 கோடி நெடுஞ்சாலைத் துறை மோசடி: முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு லஞ்ச ஒழிப்புத் துறை சம்மன்!
சென்னை: நெடுஞ்சாலைத் துறை பணிகளில் நடைபெற்ற ரூ.3.23 கோடி முறைகேடு புகார் தொடர்பாக, திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) போலீஸார் நேரில் ஆஜராகக் கோரி சம்மன் அனுப்பியுள்ளனர். இதேபோல், வேலைவாய்ப்பு மோசடி வழக்கில் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கருக்கும் மத்திய குற்றப்பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
20 இடங்களில் அதிரடி சோதனை; ஆவணங்கள் பறிமுதல்
கடந்த திமுக ஆட்சிக்காலத்தில், நெடுஞ்சாலைப் பணிகளை மேற்கொள்ளாமலேயே ஒப்பந்ததாரர்கள் ரூ.3.23 கோடி பணம் பெற்று மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, அரசு அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் உட்பட 11 பேர் மீது சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கடந்த 24-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, கடந்த 25-ஆம் தேதி எ.வ.வேலு மற்றும் தொடர்படையவர்களின் வீடு மற்றும் அலுவலகங்கள் என சென்னை (4), திருவண்ணாமலை (4), கரூர் (7), திண்டுக்கல் (2), கோவை (2), திருப்பூர் (1) உள்ளிட்ட மொத்தம் 20 இடங்களில் அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையின் போது, நெடுஞ்சாலைத் துறை தொடர்பான முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் சான்றுகள், சொத்து மதிப்பு ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத ரூ.40 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் தெரிவித்தனர். இந்த ஆவணங்களின் அடிப்படையில் மேல் விசாரணை நடத்த, ஓரிரு நாளில் நேரில் ஆஜராக வேண்டும் என எ.வ.வேலுவுக்கு தற்போது சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு சம்மன்
மறுபுறம், போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.23 லட்சம் மோசடி செய்த வழக்கில், அரியலூரைச் சேர்ந்த இளஞ்செழியன் என்பவர் கடந்த 24-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் சீனிவாசன் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சருக்குத் தொடர்பு?: கைதான இளஞ்செழியன் அளித்த வாக்குமூலம் மற்றும் புகாரின் அடிப்படையில், இந்த வேலைவாய்ப்பு மோசடியில் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கருக்கும் தொடர்பு இருப்பதாக முதல் தகவல் அறிக்கையில் (FIR) சேர்க்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீஸார் சிவசங்கரை இன்று (ஜூலை 1-ஆம் தேதி) விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளனர். அவர் இன்று விசாரணைக்கு ஆஜராவாரா அல்லது நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி நாடுவாரா என்பது இன்று தெரியவரும். இதற்கிடையே, கைதான இளஞ்செழியனை 7 நாட்கள் (வரும் 6-ஆம் தேதி வரை) போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியதை அடுத்து, தனிப்படை போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

AthibAn Tv