3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கு: கூலித் தொழிலாளியின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு!
மதுரை: நெல்லை மாவட்டத்தில் 6, 7 மற்றும் 8 வயதுடைய 3 பிஞ்சுச் சிறுமிகளை மிரட்டிப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றவாளியான கூலித் தொழிலாளிக்கு நெல்லை விசாரணை நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை (தூக்கு தண்டனை) சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு இன்று அதிரடியாக உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது. "குழந்தைகளைப் பாதுகாப்பதில் சட்டம் எப்போதும் முதுகெலும்பாகவே செயல்படும்" என்று இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பின் போது நீதிபதிகள் ஆவேசமாகத் தெரிவித்துள்ளனர்.
வழக்கின் பின்னணி:
நெல்லை மேலப்பாளையம் குறிச்சி அருகே உள்ள அழகிரிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் சேகர். கூலித் தொழிலாளியான இவருக்குத் திருமணமாகி 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது. கடந்த 2023-ம் ஆண்டில், இவர் தனது வசிப்பிடப் பகுதியில் இருந்த 6, 7 மற்றும் 8 வயதுடைய மூன்று சிறுமிகளை மிரட்டித் தனது வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று, ஒரே நேரத்தில் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இக்கொடூரம் குறித்து வெளியே யாரிடமாவது சொன்னால் கொலை செய்துவிடுவதாகவும் அச்சிறுமிகளை மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் தரப்பில் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸார் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஆனந்த் சேகரை அதிரடியாகக் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நெல்லை நீதிமன்றம், பிஞ்சு குழந்தைகளுக்குக் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை இழைத்த ஆனந்த் சேகருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்ததுடன், பாதிக்கப்பட்ட மூன்று சிறுமிகளுக்கும் அரசு சார்பில் தலா 7 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
உயர் நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு:
விசாரணை நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையைச் சட்டப்படி உறுதி செய்யக் கோரி (Capital Punishment Confirmation), தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விரிவாக விசாரித்த நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இன்று தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது.
நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டதாவது:
"ஒரு சமூகத்தின் உண்மையான அளவீடு என்பது, அந்தச் சமூகத்தில் எளிதில் பாதிக்கப்படக் கூடிய நிலையில் இருப்பவர்களை (Vulnerable) அது எவ்வாறு பாதுகாக்கிறது என்பதில் தான் உள்ளது. இந்த வழக்கைப் பொறுத்தவரை, குற்றவாளி வெறும் மனித உடலுக்கு எதிராக மட்டும் இந்த வன்முறையை நிகழ்த்தவில்லை; மாறாக மூன்று பிஞ்சு ஆன்மாக்களுக்கு எதிராகத் திட்டமிட்டு இந்தத் துரோகத்தையும் வன்முறையையும் நிகழ்த்தியுள்ளார். குழந்தைகளைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டி, இந்தக் கொடூரத்தைச் செய்துள்ளார். இதுபோன்ற மிருகத்தனமான குற்றங்களுக்கு எவ்வித இரக்கமும் காட்டுவது சமூகத்தில் மிகவும் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும்.
குழந்தைகளின் உணர்வுகளை மிக மலிவாகக் கருதிய இந்தக் குற்றவாளி, தனது மீதி வாழ்நாளைச் சிறையில் கழிப்பதை இந்த நீதிமன்றம் எக்காரணம் கொண்டும் விரும்பவில்லை. குழந்தைகளைப் பாதுகாப்பதில் சட்டம் எப்போதும் முதுகெலும்பாகவே செயல்படும். இந்தத் தீர்ப்பு இதுபோன்ற எண்ணம் கொண்டவர்களுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது வெறும் தீர்ப்பு மட்டுமல்ல, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் மற்றும் சமூகத்தின் ஒழுக்கத்தை மீட்டெடுக்கும் உன்னத முயற்சி" என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தீர்க்கமாகக் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, இந்த கொடூர வழக்கில் குற்றவாளி ஆனந்த் சேகருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நீதிமன்றம் முழுமையாக உறுதி செய்கிறது. மேலும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, நீதிமன்றப் பதிவாளர் உத்தரவு உள்ளிட்ட அனைத்து அரசு ஆவணங்களிலிருந்தும் பாதிக்கப்பட்ட மூன்று குழந்தைகளின் அடையாளம் மற்றும் தனிப்பட்ட விவரங்கள் முற்றிலும் மறைக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.


AthibAn Tv